“வெடிகுண்டு வீசுவேன்” என பேச்சு.. சீமானுக்கு சம்மன் வழங்க சென்னையில் சுத்து போடும் ஈரோடு போலீசார்!
சென்னை: வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் வழங்க 2வது நாளாக ஈரோடு போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி ஈரோடு அசோகபுரம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது, "உன் பெரியார் வைத்துள்ளது வெங்காயம். என் தலைவன் வைத்துள்ளது வெடிகுண்டு. பி கேர்ஃபுல்" என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும், மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.
அந்தப் புகார்களின் அடிப்படையில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், சீமான் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு நேரடியாக சென்று கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் வழங்கினர்.
ஆனால், சீமான் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்குவதற்காக ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் நேற்று சென்னை நீலாங்கரைக்கு விரைந்தனர். சீமான், தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். இரவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில், சீமானுக்கு சம்மன் வழங்க 2வது நாளாக ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சென்னை நீலாங்கரையில் முகாமிட்டுள்ளனர். வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற சம்மனுடன் இன்று முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர் சம்மனை தொடர்ந்து நேற்று இரவு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார் சீமான். இரவு 10 மணி முதல் 11.15 வரை சீமானிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "போலீஸ் விசாரணையில் சென்றமுறை கேட்ட அதே பழைய கேள்விகளையே இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை. விசாரணைக்கு தாமதமாக வர, போலீசாரே காரணம். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணைக்கு மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராக தயார். போலீஸ் விசாரணையில் என்னை நல்ல முறையில் நடத்தினர்.
இந்த வழக்கை விசாரித்து முடிக்க 3 மாதம் கால அவகாசம் உள்ளது. மூன்றே நாளில் இதை விரைந்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனக்கு சம்மன் கிடைத்தபோது நான் பயணத்தில் இருப்பதாக தெரிவித்தேன். மீண்டும் கொடுத்த சம்மனை அடுத்து போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன். போலீஸ் தரப்புக்கு இந்த வழக்கில் அழுத்தம் தரப்படுகிறது. ஆளும் திமுக அரசு இந்த வழக்கை நீட்டித்துக் கொண்டு செல்கிறது." என்றார்.












Click it and Unblock the Notifications