முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா! கொங்கு ஈஸ்வரன் அறிவிப்பு! வலுவாகும் கூட்டணி!
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடத்தும் ஈஸ்வரன்.
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விரைவில் நன்றி தெரிவிக்கும் விழா நடத்தப்படும் என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
இனி விசைத்தறி தொழிலை நம்பி பிழைக்க முடியாது என்ற நிலைக்கு விசைத்தறியாளர்கள் தள்ளப்பட்டிருந்த சூழ்நிலையில், தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி அறிவித்ததற்காக முதல்வருக்கு நன்றி கூறிக் கொள்வதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

விசைத்தறியாளர்கள்
தமிழகத்தில் இருக்கின்ற லட்சக்கணக்கான விசைத்தறியாளர்களுடைய நீண்ட கால கோரிக்கையாக தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முதலமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார். இதற்கு பரிந்துரை செய்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் விசைத்தறியாளர்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

1000 யூனிட் இலவச மின்சாரம்
முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது விசைத்தறியாளர்கள் தன் இடத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று தான் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியிலேயே 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் லட்சக்கணக்கான விசைத்தறியாளர்கள் பயன்பெறுவார்கள். மிகவும் நெருக்கடியான சூழலை விசைத்தறி தொழில் சந்தித்து கொண்டிருக்கும்போது இந்த அறிவிப்பு விசைத்தறியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

விசைத்தறி தொழில்
விசைத்தறியாளர்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பொழுது தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து விசைத்தறி சங்க பொறுப்பாளர்களும் மின்சாரத்துறை அமைச்சரை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து முறையிட்டதை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் பரிந்துரையின் பெயரில் விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் அறிவித்து இருப்பது விசைத்தறி தொழிலை காப்பாற்றுகின்ற ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

நம்பி பிழைக்க முடியாது
இனி விசைத்தறி தொழிலை நம்பி பிழைக்க முடியாது என்ற நிலைக்கு விசைத்தறியாளர்கள் தள்ளப்பட்டிருந்த சூழ்நிலையில் தமிழக அரசினுடைய அறிவிப்புகள், தடுமாறிக் கொண்டிருந்த விசைத்தறி தொழிலை காப்பாற்றும் நடவடிக்கைகளாக பார்க்கப்படுகிறது. விசைத்தறியாளர்கள் நிலைமையை புரிந்து கொண்டு விசைத்தறியாளர்களின் குடும்பங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி தெரிவிக்கும் விழா
பரிந்துரை செய்து இதற்கு காரணமாக இருந்த மின்சாரத்துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மிக விரைவில் விசைத்தறியாளர்கள் சார்பாக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications