திருச்சியில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு... இது யார் தூண்டுதல்..? -ஈஸ்வரன் கேள்வி
சென்னை: திருச்சியில் உள்ள கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்பிள்ளை சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பது தமக்கு வேதனையளிப்பதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாருடைய தூண்டுதலின் பேரில் அனுமதி மறுக்கப்பட்டது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அனுமதி மறுப்பு
இந்திய சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் அளப்பரிய தியாகத்தை இந்த உலகமே அறியும். உலகம் போற்றும் உத்தமர் சிலைக்கு திருச்சியில் மாலை அணிவிக்க அனுமதி மறுத்திருப்பது யாரும் எதிர்பாராதது. வேதனையளிக்கிறது.

அரசு அனுமதி
கொரோனா பெருந்தொற்று பாதிப்பிற்கு பிறகு எத்தனையோ நிகழ்வுகள் நடந்து இருக்கிறது. அதற்கெல்லாம் அரசு அனுமதி அளித்திருக்கிறது. வ.உ.சி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுத்திருக்க கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அனுமதி மறுத்திருப்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

ஈஸ்வரன் கேள்வி
பல்வேறு சங்கங்களும், பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் நாளை காலை குருபூஜை நிகழ்ச்சியையொட்டி மாலை அணிவிக்க தயார் நிலையில் இருக்கும் போது திடீரென்று அனுமதி மறுத்திருப்பது யாருடைய தூண்டுதலின் பேரில் என்று தெரியவில்லை.

மனம் புண்படும்படி
வ.உ.சி போன்ற தியாகிகளின் குருபூஜையை அரசு வெகுவிமர்சையாக கொண்டாட வேண்டிய சூழ்நிலையில் ஆர்வத்தோடு மாலை அணிவிக்க தயாரானவர்களை தடுத்தது ஒவ்வொருவருடைய மனதையும் புண்படுத்தி இருக்கிறது. அரசு உடனடியாக திருச்சியில் உள்ள வ.உ.சி சிலைக்கு குருபூஜை தின மரியாதையை செலுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.












Click it and Unblock the Notifications