பணத்திற்காக கட்டிய மனைவியை கூட தன் மனைவி இல்லை என்று சொல்வார்கள் - டிடிவி தினகரன் தாக்கு
அதிமுக அயோக்கியர்களின் கூடாரம் ஆகிவிட்டதாகவும், இரட்டை இலை சின்னம் தற்போது எம்ஆர் ராதா, வீரப்பன் போன்ற வில்லன்களின் கையில் மாட்டிக் கொண்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இருந்தவர்கள் அதை விட ஆபத்தானவர்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். பணத்திற்காக கட்டிய மனைவியை கூட தன் மனைவி இல்லை என்று சொல்வார்கள் எனவும் கடுமையாக சாடியுள்ளார் டிடிவி தினகரன்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற வகையில் நீதிமன்றம் வரை சென்று அதனை முறியடித்தார். இதனால், எடப்பாடி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி விட்டது என்றும் அறிவித்தனர்.
ஊழல் ஒழிப்பு வேஷம் கட்டி வந்தீங்களே? ஜெயக்குமார் வழக்கு என்னாச்சு? - ஸ்டாலினை சீண்டும் டிடிவி!
மீண்டும் கூடும் அதிமுக பொதுக்குழு
ஜூலை 11ம் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மீண்டும் கூட்டப்படும். அதில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு செய்யப்படும் என்று எடப்பாடி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி கூடும் பட்சத்தில் அது சட்டப்படி செல்லாது என்றும் ஓபிஎஸ் தரப்பில் கூறி வருகின்றனர்.
ஐபிஎல் ஏலம்
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், திமுகவை கைப்பற்ற ஐபிஎல் ஏலம் போன்று பல கோடி ரூபாயை கொட்டி நிர்வாகிகளை வாங்கிய போதிலும் நீதிமன்ற உத்தரவால் எடப்பாடி பழனிசாமி நினைத்தது நடக்காமல் போய்விட்டதாக விமர்சித்துள்ளார்.
அயோக்கியர்களின் கூடாரம்
திருவள்ளூர் மாவட்ட அமமுக செயல்வீரர்கள் கூட்டம் அயப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அதிமுக அயோக்கியர்களின் கூடாரம் ஆகிவிட்டதாகவும், இரட்டை இலை சின்னம் தற்போது எம்ஆர் ராதா, வீரப்பன் போன்ற வில்லன்களின் கையில் மாட்டிக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
ஓபிஎஸ் மீது தாக்குதல்
பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், நல்வாய்ப்பாக வாட்டர் பாட்டிலால் மட்டும் தான் அவர் தாக்கப்பட்டார். அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அதை விட ஆபத்தானவர்கள் என்றும் குறிப்பிட்டார். பணத்திற்காக கட்டிய மனைவியை கூட தன் மனைவி இல்லை என்று சொல்வார்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.