"நானும் ஒரு கிறிஸ்துவன் தான்.." கிறிஸ்துமஸ் விழாவில் பட்டுனு சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: தலைநகர் சென்னையில் துறைமுகம் தொகுதியில் கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் உதயநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது பேசி அவர் தானும் கிறிஸ்துவன்தான் என்றும் தான் இப்படிக் கூறுவதால் சிலருக்கு வயிறு எரியும் என்றும் பேசினார்.
இன்னும் சில நாட்களில் உலகெங்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இப்போதே அனைத்து வீடுகளிலும் நட்சத்திரங்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அரசியல் கட்சிகள் சார்பிலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. திமுக, அதிமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவில் கொண்டாடப்படுகிறது.

அமைச்சர் உதயநிதி
இதற்கிடையே திமுக சார்பில் தலைநகர் சென்னையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. மண்ணடியில் அமைந்துள்ள டான் பாஸ்கோ தொடக்கப் பள்ளியில் இந்த விவா நடைபெற்றது. அங்குள்ள பள்ளி மைதானத்தில் அமைச்சர் உதயநிதி கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களை வழங்கினார். சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அமைச்சர் உதயநிதி புத்தாடைகள், மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திராவிட மாடல் ஆட்சி
பரிசுப் பொருட்களை வழங்கிய பிறகு அங்கு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, "இப்போது சிலருக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இதற்கு நான் பதில் தருகிறேன். இந்து அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு இப்போது அங்கு அல்லேலூயா எனக் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வது தான் திராவிட மாடல் ஆட்சியாகும். அவர் எப்போதுமே மாலையும் கத்தமாகத் தான் இருப்பார். அதேநேரம் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார்.

நானும் கிறிஸ்துவன்தான்
இதற்குப் பெயர் தான் சமூக நிதி ஆட்சி. இதைத் தான் பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் எங்களுக்கு கற்றுக் கொடுத்தது. இத்தகைய ஆட்சியைத் தான் இப்போது முதல்வர் ஸ்டாலினும் நடத்தி வருகிறார். இன்னுமே சொல்லப்போனால், நானும் ஒரு கிறிஸ்துவன் தான். கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் படித்தது எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளி.. கல்லூரியும் லயோலா கல்லூரியில் தான் படித்தேன். அதேபோல நான் காதலித்து மணந்ததும் கிறிஸ்துவ மத்தை சேர்ந்தவர் தான்.

வயிறு எரியும்
சேகர்பாபு அல்லேலுயானு சொல்கிறார்.. உதயநிதி கிறிஸ்தவனு சொல்கிறார் என்று சிலருக்கு நிச்சயம் வயிறு எரியவே செய்யும்.. நல்லா எரியட்டும்... அமைச்சர் சேகர்பாபு எந்தளவுக்கு சமூக நல்லிணக்கத்தோடு செயல்படுகிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி.. நலத்திட்ட உதவிகள் என்பது தேர்தலுடன் நின்றுவிடுவது இல்லை. ஆண்டு முழுவதும் இதுபோல நலத்திட்டங்கள் தொடரும். மக்கள் பணியே எங்கள் முதல் பணி.

மேயர் பிரியாவுக்கு நன்றி
தலைநகர் சென்னையில் கடந்தாண்டு மழை பெய்த போது சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. இது கடந்தாட்சியில் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவு. இதனால் மக்கள் கடும் துயரத்தை எதிர்கொண்டனர்.. இருப்பினும், இந்தாண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்தது.. இதன் காரணமாகவே மாண்டாஸ் புயல் சமயத்தில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை.. இதற்காக ஓயாமல் பணியாற்றிய அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியாவுக்கு நன்றி. புயல் வந்ததுக்கு அறிகுறியே இல்லை என்று பொதுமக்கள் பலரும் அரசைப் பாராட்டினர்.

முதல்வரின் கடின உழைப்பு
இந்தியா டூடே கருத்துக்கணிப்பில் நமது நாட்டிலேயே மிகச் சிறந்த மாநிலம் என்ற சிறப்பை தமிழ்நாடு பெற்றுள்ளது. இதற்கு முதல்வரின் அயராத உழைப்பும் கொண்டு வரப்பட்ட திட்டங்களும் தான் முக்கிய காரணம்.. திமுகவினர் இதைத் தமிழ்நாடு மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அடுத்து ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ளும் வகையில் நாம் இப்போதே தயாராக வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications