நீங்களே நினைச்சாலும் டிரம்ப் விட மாட்டார்.. செந்தில் பாலாஜி சகோதரர் வழக்கில் நீதிபதிகள் கலகல!
சென்னை: மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அனுமதி கோரி தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் 15 நாட்கள் தங்கியிருக்க அனுமதி கொடுத்தால் போதும் என அசோக்குமர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், 'நீங்களே நினைச்சாலும் டிரம்ப் விட மாட்டார்' என நகைச்சுவையாக பேசினர்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்பட 13 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கு சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

செந்தில் பாலாஜி வழக்கு
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அசோக் குமார் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தார். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் அசோக் குமார் ஆஜர் ஆனார். செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அசோக் குமார், இதய சிகிச்சை செல்வதற்காக அமெரிக்கா செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சகோதரர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அசோக் குமார் சார்பில் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜரானார்.
நீங்களே நினைத்தாலும் டிரம்ப் விடமாட்டார்
அவர் வைத்த வாதத்தில், "15 நாள்களுக்கு மட்டும் அனுமதி அளித்தால் போதும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "நீங்களே நினைத்தாலும் அமெரிக்காவில் நீண்ட நாட்கள் இருக்க முடியாது. டொனால்டு டிரம்ப் உங்களை வெளியேற்றி விடுவார்" என நகைச்சுவையாக கருத்து தெரிவித்தனர்.
அமலாக்கத்துறை தரப்பில், இந்த வழக்கிற்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கோரப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், ஒருவேளை அமெரிக்கா செல்ல அனுமதி கொடுத்தால் பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் ஒருவரான அசோக் குமாருக்கு எதிரான வழக்கு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை இவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை சுமார் 5,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
அசோக் குமார் அமலாக்கத்துறையின் சம்மன்களுக்கு ஆஜராகவில்லை. அதன் பிறகு அவர் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவானார். 2 ஆண்டு தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அதன் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.












Click it and Unblock the Notifications