எல்லாம் டிராமா.. எடப்பாடி பழனிச்சாமி தைரியமாக சொல்வாரா? இது விளையாட்டு செய்தி.. புகழேந்தி கிண்டல்
சென்னை: அதிமுக பாஜக இடையே கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் அறிவித்திருப்பது டிராமா என்று ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி இதனை அறிவிக்கட்டும் என்றும் அப்படி சொன்னால் அடுத்த 6 மணி நேரத்தில் சிறைக்கு செல்வார்கள் என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அண்ணா பற்றி அண்ணாமலை பேசியது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்தனர். இதனையடுத்து அதிமுக பாஜக இடையே கூட்டணி கிடையாது என்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கூறியுள்ளார். லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஜெயக்குமாரின் அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இது குறித்து கருத்து கூறியுள்ள ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி, ஜெயலலிதா என்ற ஆளுமையை விட எனது மனைவி ஆயிரம் மடங்கு பெரியவர் என்று சொன்னவர் அண்ணாமலை. எனது தாயார் நூறு மடங்கு பெரியவர் என்று சொன்னவர் அசிங்கப்படுத்தியவர் அண்ணாமலை. அதைக்கேட்டு கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று அண்ணாமலையை கண்டித்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடியவர்கள் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் கூட்டணி கிடையாது என்று சொன்னார்கள். இப்போது மீண்டும் கூட்டணி கிடையாது என்றும் சொல்கிறார்கள். கூட்டணி தேர்தல் நேரத்தில் பேசப்படும் என்று சொல்கிறார். எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணாமலையும் மீண்டும் சமாதானமாகிவிடுவார்கள் என்று கூறினார் புகழேந்தி.
எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணாமலையும் சேர்ந்து டெல்லிக்கு செல்வார்கள். அடுத்து அண்ணாமலை தனியாகவும் எடப்பாடி பழனிச்சாமி தனியாகவும் டெல்லிக்கு செல்வார்கள். விளையாட்டு செய்திகள் இத்துடன் முடிந்தது என்று நாம் முடித்து விடுவோம் என்றும் புகழேந்தி கிண்டலடித்தார்.
நான் கேட்பதெல்லாம் தைரியம், துணிவு இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இதே வார்த்தையை சொல்லச்சொல்லுங்கள் சொல்வாரா என்றும் புகழேந்தி கேள்வி எழுப்பினார். பாஜக உடன் கூட்டணி இல்லை இனி டெல்லி பக்கம் தலை வைக்க மாட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்லட்டும் ஆறு மணி நேரத்தில் சிறைக்கு செல்வது உறுதி என்றும் சொன்னார் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி. தொடர்ந்து பேசிய புகழேந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஒருபோதும் யாரையும் தவறாக பேசி விட்டது. உறவு வைத்துக்கொண்ட ஒருவருக்கொருவர் எட்டி உதைக்கிறார். இது எல்லாம் விளையாட்டு செய்திதான்.
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னால் மட்டும்தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications