கேட் கீப்பர் வடஇந்தியர்! பள்ளி வேன் டிரைவர் சொன்ன ஒரு வார்த்தை! ரயில் விபத்துக்கு முன் என்ன நடந்தது?
சென்னை: கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில், ரயில்வே கிராசிங் கேட்டை மூட வேண்டாம் என்று வேன் டிரைவர் கூறியதே காரணம் என கூறப்படுகிறது. ஆனால் அங்கே இருந்த மக்கள் பலரும் கேட் மூடப்படவே இல்லை திறந்தே இருந்தது என்கின்றனர். இன்னும் சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்களும் இந்த விவகாரத்தில் வெளியாகி உள்ளது.

புதிய தகவல்
கடலூர் பள்ளி வேன் டிரைவர், ரயில்வே கிராசிங் கேட்டை மூட வேண்டாம் என்று கூறியதே விபத்துக்கு காரணம் என்பது கூறப்படுகிறது . இதுகுறித்து வெளியான புதிய தகவல்களின்படி, அந்த வேன் ஓட்டுநர் அப்படி எதுவும் செல்லவில்லை.. ஆனால் அங்கே இருந்த மக்கள் பலரும் கேட் மூடப்படவே இல்லை திறந்தே இருந்தது என்கின்றனர். கேட் கீப்பர் தன்னை காப்பாற்றிக்கொள்ள இப்படி சொல்கிறார் என்கின்றனர். மேலும், ரயில்வே நிர்வாகம் வட இந்தியர்களை பல மாநிலங்களில் நியமித்துள்ளது. அவர்களுக்கு தமிழ் மொழி தெரியாததால் வட இந்தியாவை போலவே இங்கேயும் விதிமீறல்கள் நடப்பதாக மக்கள் விமர்சனம் செய்கின்றனர்.
ரயில் பள்ளி வேன் விபத்து
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது இந்த விபத்து நேரிட்டது. திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் மீது மோதியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு மாணவியும், ஒரு மாணவனும் உயிரிழந்தனர். மேலும், காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்ட தகவல்களின்படி, கேட் கீப்பர் தூங்கியதால் கேட்டை மூடாமல் இருந்ததாகவும், இதனால் வேன் தண்டவாளத்தை கடந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர்.
நேரில் ஆய்வு
கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்து நடந்த நிலையில், திருச்சி ரயில்வே எஸ்.பி. ராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினார். மேலும், திருச்சி மற்றும் சென்னை ரயில்வே பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகனும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் கடலூர் - மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும், ரயில் மோதியதில் வேன் உருக்குலைந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்
ரயில் மோதி பள்ளி வேன் விபத்து
ரயில் மோதிய வேகத்தில் பள்ளி வேன் சுமார் 50 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், கேட் கீப்பர் கேட்டை மூட முயன்றபோது, டிரைவர் அவசரப்படுத்தி தண்டவாளத்தை கடந்து செல்ல வற்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் செம்மங்குப்பம் லெவல் கிராசிங்கில் ரயில்வே கேட்டை உரிய நேரத்தில் மூடாத கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ரயில் வருவது தெரிந்தும் வேன் டிரைவர் கூறியதை கேட்டு ரயில்வே கேட்டை திறந்ததே விபத்திற்கு காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட்
தெற்கு ரயில்வே அளித்த விளக்கத்தில், விபத்து காலை 7.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. கேட் கீப்பர் கேட்டை மூட தொடங்கியபோது வேன் ஓட்டுநர் வேகமாக வேனை இயக்கியதால் விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட் எனவும், கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளில்லாத ரயில்வே கேட் மூடப்படாததால் வேன் உள்ளே நுழைந்ததாக முதலில் மக்கள் கூறிய நிலையில், ரயில்வே இதனை மறுத்துள்ளது.
நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்
கடலூர் அருகே மூடப்படாத ரயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரயில் மோதிய விபத்து காரணமாக முக்கிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. திருச்சியிலிருந்து தாம்பரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
கடலூர் அருகே நிகழ்ந்த இந்த விபத்து, ரயில்வே கேட்டின் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் ஓட்டுநர்களின் பொறுப்பற்ற தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications