கொரோனாவில் இருந்து மீண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. இதய நோய்க்கு தீவிர சிகிச்சை
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை: கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்துள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதய நோய் பாதிப்புக்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ
38 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது.

மா.சுப்ரமணியன்
ஈவிகேஎஸ் இளங்கோவனை கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தற்போது சீராக உள்ளது. மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது

கொரோனா தொற்று
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக அவருடைய நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

மீண்டார் இளங்கோவன்
இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதய பாதிப்பு இருப்பதால் அவர் சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவர் நலமுடன் இருப்பதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications