ஹேக்கிங்கை விட மோசம்.. EVMஇல் உள்ள மெகா பிரச்சினை இதுதான்! சசிகாந்த் செந்தில் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஹேக் செய்யப்படும் அபாயத்தைத் தாண்டியும் மற்றொரு பெரிய சிக்கல் இருப்பதாகக் காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் இப்போது தேர்தல்கள் எல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மூலமாகவே நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினாலும் கூட அதைத் தேர்தல் ஆணையம் மறுத்தே வருகிறது.

இதற்கிடையே ஹேக்கிங்கை தாண்டில் இதில் மற்றொரு பெரிய சிக்கல் இருப்பதாகக் காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
சசிகாந்த் செந்தில்: அதில் அவர், "இந்த இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுகிறதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதில் பல அரசியல் கட்சிகள் இவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்வதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் தேர்தல் ஆணையம் சொல்லும் பதில், எங்கே ஹேக் செய்கிறார்கள்.. அதை எங்களுக்கு நிரூபித்துக்காட்டுங்கள் என்பது தான்.
ஒரு சமயம் நாங்கள் இவிஎம் இயந்திரங்களை வெளியே வைக்கிறோம். அதை ஹேக் செய்து காட்டுங்கள் என்றெல்லாம் கூட சொன்னார்கள். இது குறித்து நீதிமன்றங்களில் தொடரப்பட்டும் வழக்குகளிலும் கூட போதிய ஆதாரம் இல்லை என்று கூறியே நீதிபதிகள் வழக்கை டிஸ்மிஸ் செய்துள்ளனர். அதாவது இவிஎம் இயந்திரம் ஹேக் செய்யப்படுகிறது என்பதை நாம் தான் நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
பெரிய பிச்சினை: ஆனால், இதைத் தாண்டி இவிஎம் இயந்திரத்தில் மற்றொரு மிகப் பெரிய கோளாறு இருக்கிறது. அதைத் தான் நாம் பெரிதாகப் பேச வேண்டும். ஆனால், யாரும் அது குறித்துப் பேசுவதே இல்லை. இந்த சிஸ்டத்திலேயே இருக்கும் அடிப்படை பிழை என்றால் அதுதான்.
இவிஎம் இயந்திரத்தைப் பொறுத்தவரை நீங்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று மை எல்லாம் வைத்துவிட்டு வாக்களிக்கச் செல்லும் போது அங்கே இந்த இயந்திரம் இருக்கும். நீங்கள் வாக்களிக்க விரும்பும் நபருக்கு அருகே உள்ள பொத்தானை அழுத்தினால் ஒரு சத்தம் வரும் கூடவே ஒரு விளக்கும் எரியும். ஆனால், நான் போட்ட வாக்கு அந்த குறிப்பிட்ட கட்சிக்குத் தான் சென்றது என்பதை உறுதி செய்ய எந்தவொரு செயல்முறையும் இல்லை. எது எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் போய் இருக்கலாம்.
விவிபாட்: முதலில் இவிஎம் முறையில் இந்த சரிபார்ப்பிற்கு எதுவுமே இருக்காது. இதனால் உள்ளே ஹேக் நடந்தாலும் நமக்கு அது தெரியாது. சரிபார்ப்பிற்கே எதுவும் இல்லை என்றால் இந்த சிஸ்டமே தவறானது என்ற விவாதம் எழுந்தது. இந்த வலுவான வாதம். இதில் சிக்கினால் இவிஎம் தடை செய்யப்படும் என்பதைப் புரிந்து கொண்ட தேர்தல் ஆணையம் விவிபேட் எனப்படும் ஒப்புகை சீட்டு முறையைக் கொண்டு வருவார்கள்.
இந்த விவிபேட் முறையில் நாம் எந்தக்கட்சிக்கு வாக்களித்தோமோ அந்தக் கட்சியின் சின்னம் அருகே பிரிண்ட் ஆகி வந்துவிடும். இதுவே சரிபார்ப்பிற்கான பிராசஸ் என்று தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், இந்த விளக்கத்திலேயே ஒரு பிரச்சினை இருக்கிறது. அதாவது இந்த பிராசஸில் எனது வாக்கு என்பது எது? வாக்களிக்கும் போது எனக்கு ஒரு சத்தம் வருகிறது. இந்த ஒப்புகை சீட்டும் வருகிறது. இரண்டில் எது எனது வாக்கு.. இதுதான் அடிப்படை கேள்வி.
எது எனது வாக்கு: அந்த சத்தம் தான் உங்கள் வாக்கு என்றால் அதைச் சரிபார்க்க எதுவுமே இல்லை. அப்போது தேர்தல் முறையே ஏற்க முடியாது. அதேநேரம் பேப்பர் தான் வாக்கு என்றால் மெஷினில் வாக்குகளை எண்ணக்கூடாது. இந்த பேப்பரை தான் வாக்குச்சீட்டுகளாகக் கருதி எண்ண வேண்டும். இங்கே தான் இன்று தேர்தல் முறையே மாட்டிக்கொண்டு முழிக்கிறது.
மெஷினில் பதிவாகும் வாக்கிற்கும் ஒப்புகை சீட்டிற்கும் வேறுபாடு இருந்தால்.. இந்த ஒப்புகை சீட்டையே வாக்காக எடுத்துக் கொள்வோம் எனத் தேர்தல் ஆணையமே கூறுகிறது. அதாவது சட்டப்பூர்வமாக ஒப்புகை சீட்டு தான் வாக்கு என்கிறார்கள். ஏனென்றால் அதைத் தான் சரிபார்க்க முடிகிறது. ஆனால் இதை எண்ண மாட்டோம். இதைப் பார்க்க மட்டும் செய்யுங்கள். ஆனால் அதை நாங்கள் எண்ண மாட்டோம் என் தேர்தல் ஆணையம் சொல்வதை ஏற்கவே முடியாது.
ஹேக்கை விட பெரிய பிரச்சினை: இப்போது தேர்தல் ஆணையம் ஹேக் ஆகவில்லை என்று மட்டுமே சொல்கிறார்கள். இங்கே ஹேக் என்பதைத் தாண்டி இந்த சிஸ்டமே தவறானது. இந்த சிஸ்டத்தில் நம்மால் சரிபார்க்கவே முடியாது. அதுதான் பிரச்சினை. இதைச் சரி செய்யவும் வழிகள் இருக்கிறது. அதாவது நீங்கள் ஒப்புகை சீட்டை எண்ண வேண்டும்.
இதனால் தேர்தல் முடிவுகள் வர சில நாட்கள் கூடுதல் ஆகலாம். ஆனால், ஜனநாயகத்தை அதுதான் பாதுகாக்கும். மின்சார இயந்திரங்கள் என்பது ஒரு சரிபார்க்கவே முடியாது ஒரு பிராசஸ். இது பொதுமக்களின் அடிப்படை உரிமை. அதைத் தேர்தல் ஆணையத்தால் மறுக்கவே முடியாது" என்கிறார்.












Click it and Unblock the Notifications