பிணம் ஏற்றிய ஆம்புலன்ஸில் ஸ்டிக்கர் ஒட்டிய திமுக.. சிபிஐ விசாரணை வேண்டும்! கரூர் விஜயபாஸ்கர் கறார்
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பால சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில், அதனை தீர விசாரிக்க வேண்டும் என இந்த சம்பவத்திற்கு முழுமையான நியாயமான தீர்வு வேண்டும் என்றால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்கள் முன் விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார்.
இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் பிணங்களை வைத்து அரசியல் செய்கிறார் எடப்பாடி என குறிப்பிட்டு இருந்தார். அமைச்சரின் இந்த அறிக்கை கண்டிக்கத்தக்கது.

கரூர் கூட்ட நெரிசல்
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் வீடுகளுக்கோ அல்லது தகனம் செய்வதற்கு கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் 40 ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி தயாராக இருந்தது. அந்த ஆம்புலன்ஸ்களில் சுய விளம்பரத்திற்காக மருத்துவர் அணி கரூர் மாவட்ட திமுக என்று ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் மருத்துவமனையில் திமுக ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்யப்பட்டது. ஆம்புலன்ஸ்களை ரெடி செய்வது அரசின் வேலை.
விஜய் பிரசாரம்
ஆனால் இவர்கள் விளம்பரத்திற்காக இந்த வேலையை செய்தார்கள். பிணங்களை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை. உங்கள் திமுக கட்சி தான் செய்கிறது. அதே போல எங்கள் பொது செயலாளர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை மிரட்டுகிறார் என ஒரு கருத்தை சொல்கிறார். எங்கள் பொது செயலாளர் நடத்தும் பொதுக் கூட்டங்களில் அவர் பேச ஆரம்பித்து பத்து நிமிடங்களுக்குள் கூட்டத்திற்குல் ஆம்புலன்ஸ் வருகிறது. இது கூட்டத்தை கலைக்க நிகழ்த்தும் சதி.
எம்.ஆர். விஜயபாஸ்கர்
ஆம்புலன்ஸ் செல்வதற்கு மாற்று வழிகள் இருந்தும் வேண்டுமென்றே கூட்டத்தை கலைப்பதற்காக பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் இந்த சம்பவங்கள் நடைபெறுகிறது. சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. அதனை தீர விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு முழுமையான நியாயமான தீர்வு வேண்டும் என்றால் சிபிஐ விசாரிக்க வேண்டும். தவெக பிரச்சார கூட்டத்துக்கு காவல் துறை போதிய பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். பாதுகாப்புக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தால் அவர்கள் அதை கடைபிடித்து இருக்கவேண்டும்.
ஆம்புலன்ஸ் சர்ச்சை
கடைபிடிக்க முடியாத கட்டுப்பாடுகள் இருந்தால், அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கலாம். இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கும். கூட்டத்துக்கு அனுமதி தரும்போது ஆம்புலன்ஸ் செல்ல வழியிருக்கிறதா என பார்க்க வேண்டும். விஜய் பேசும்போது விளக்குகள் அணைந்தன, செருப்புகள் வீசப்பட்டன. ஆளில்லாத ஆம்புலன்ஸ்கள் வந்தன. இரவோடு இரவாக பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த ஆணையத் தலைவர் விசாரணை நடத்தியபோது, அவரிடம் புகார் தெரிவித்தவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்." என்றார்.












Click it and Unblock the Notifications