மலைக்க வைக்கும் எஸ்பி வேலுமணி- ரூ600 எல்இடி பல்பை ரூ4,500க்கு வாங்கி ரூ500 கோடி ஊழல்- ரெய்டு ஏன்?
சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் எல்.இ.டி. பல்புகள் வாங்கியதில் ரூ500 கோடி ஊழல் நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில்தான் இன்று எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கிராமப்புறங்களில் எல்.இ.டி.பல்புகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக டெண்டர்களில் விதிகள் மீறப்பட்டிருந்தன. சந்தை மதிப்பை விட கூடுதல் விலைக்கு எல்.இ.டி. பல்புகளை வாங்கியதில் ரூ500 கோடி ஊழல் நடைபெற்றது என்பது புகார்.
அதிகாலையிலேயே அதிரடி.. அதிமுக மாஜிக்கள் விஜயபாஸ்கர், வேலுமணி வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு
மலைக்க வைக்கும் எல்இடி பல்பு ஊழல்
2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை உள்ளாட்சி அமைப்புகளில் தெருவிளக்குகளை எல்இடி பல்புகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. சந்தையில் ஒரு எல்இடி பல்பு ரூ600க்கு விற்பனை செய்யப்படுகிறது. எல்இடி பல்பு பொருத்த டெண்டர் எடுத்த நிறுவனங்களோ ஒரு எல்இடி பல்பின் விலை ரூ4,500 என வாங்கியதாக கணக்கு காட்டி அரசிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஒரு பல்புக்கு அரசுக்கு ரூ3,900 இழப்பு ஏற்பட்டுள்ளது. மலைக்க வைக்கிற இந்த மகா கொள்ளையில் ஈடுபட்டது சாட்சாத் வேலுமணியின் பினாமி நிறுவனங்கள்தான். மொத்தமாக 3 ஆண்டுகளில் சந்தை விலையை விட மிக மிக அதிகமாக கூடுதல் விலைக்கு எல்இடி பல்புகள் வாங்கியதில் மொத்தம் ரூ500 கோடி ஊழல் நடந்துள்ளது என்பது அம்பலமானது.
ஆளுநரிடம் மனு
இது தொடர்பாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக, ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்திடம் புகார் மனு கொடுத்திருந்தது. அந்தப் புகாரில் கேசிபி என்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பினாமி நிறுவனங்கள் உதவியுடன் எஸ்.பி.வேலுமணி ரூ500 கோடி ஊழல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதாவது பினாமி நிறுவனங்கள் டெண்டர்களில் பங்கேற்பதற்கு வசதியாக டெண்டர் விதிமுறைகளை திருத்தி உள்ளார் எஸ்பி.வேலுமணி என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை- வழக்கு பதிவு
தற்போது திமுக ஆட்சியில் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது. முதல் கட்ட விசாரணையில் எஸ்.பி.வேலுமணி ஊழல் செய்துள்ளார் என்பது உறுதியானதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, அவருக்கு சொந்தமான இடங்கள், நண்பர்கள் வீடுகள், பினாமி நிறுவனங்கள் உள்ளிட்ட 26 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
3-வது ரெய்டு
இது எஸ்.பி.வேலுமணி வீடுகள், நிறுவனங்களில் நடைபெறும் 3-வது சோதனையாகும். இதற்கு முன்னர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது, டெண்டர் முறைகேடு வழக்கு ஆகியவற்றிலும் எஸ்.பி.வேலுமணி மற்றும் பினாமிகளின் வீடுகள், நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை மாநகராட்சியில் ரூ.464 கோடி, கோவை மாநகராட்சியில் ரூ.346.81 கோடி ஊழல் முறைகேட்டில் எஸ்பி வேலுமணி ஈடுபட்டார் என்பது லஞ்ச ஒழிப்புத்துறையின் முந்தைய வழக்கு. இது தொடர்பான சோதனைகளில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, ரூ.84 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அப்போது கிரிப்டோ கரன்ஸிகளில் ரூ.34 லட்சம் முதலீடு செய்த ஆவணங்களும் சிக்கி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.