"ஈனத்தனமானது!" ஓபிஎஸின் கீழ்த்தரமான செயலை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்! பாயும் ஜெயக்குமார்
சென்னை: அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஓபிஎஸ் மிகவும் ஆவேசமாகத் தாக்கி பேசினார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த இன்று நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும், அடுத்த 4 மாதங்களில் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு
மேலும், ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கச் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதேநேரம் மறுபுறம் அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆக்கிமிரத்தனர். உள்ளே ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினர். மேலும், எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை தான் கட்சியில் இருந்து நீக்குவதாகப் பதிலுக்கு அறிவித்தார் ஓ பன்னீர்செல்வம்.

ஜெயக்குமார்
இதற்கிடையே அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஓபிஎஸ் மிகவும் ஆவேசமாகத் தாக்கி பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக பொதுக்குழுவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த கட்சியே இணைந்து இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. அவர் தனியாக ஏதேதோ பேசி வருகிறார்.

தரம் தாழ்ந்த செயல்
ஓ.பன்னீர் செல்வத்தின் செயல் தரம் தாழ்ந்து உள்ளது. அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் சமூக விரோத தாக்குதல் நடத்தி உள்ளார். ஓபிஎஸ் செயலை தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓ பன்னீர்செல்வம் திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார். அதிமுகவுக்கு ஈனத்தனமான செயல்களை ஓ.பன்னீர் செல்வம் செய்துள்ளார்.

உருட்டு கட்டை
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கட்சி நடத்திய அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு அதிமுக கொடியையும் அவர் பறக்கவிட்டுள்ளார். அதுவும் எப்படி? உருட்டுக் கட்டையில் அதிமுக கொடியைக் கட்டி, அதைத் தொங்கவிட்டு உள்ளார். சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று ஏற்கனவே மனு அளித்தோம்" என்றார்.

ஆவணங்கள் கொள்ளை
முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சில முக்கிய கோப்புகளை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எடுத்துச் சென்றதாகத் தகவல் வெளியானது. இது குறித்துப் பேசிய ஜெயக்குமார், "அதிமுக அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதிமுக தொண்டர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதை சட்டப்படி சந்திப்போம்" என்றார்.

திமுக அரசு செயல்பாடு கீழ்த்தரமானது
இன்று காலை முதல் நடைபெறும் செயல்களால் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இது குறித்து ஜெயக்குமார் பேசுகையில், "நாங்கள் நினைத்து இருந்தால் மதிமுக பிரிந்து சென்ற போது, திமுக தலைமை அலுவலகத்திற்குச் சீல் வைத்து இருக்கலாம். ஆனால், நாங்கள் அந்த தரம் தாழ்ந்த செயலை செய்யவில்லை. அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சீல் வைக்கப்பட்டதை சட்டப்படி சந்திப்போம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications