'நான் பிறந்த மண்ணான காசிமேடு பகுதியில்'.. ஜெயக்குமாரா இது.. நெகிழ வைத்த புகைப்படம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது மலரும் நினைவுகள் குறித்து பல முறை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.அப்படி அவர் நேற்று வெளியிட்ட புகைப்படம் ஒன்று பலரையும் கவர்ந்துள்ளது. அவர் கல்லூரியில் பட்டம் வாங்கிய புகைப்படம் தான் அது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது தினசரி அதிமுகவிற்காக பத்திரக்கையாளர்களை சந்திப்பது தான். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கட்சி சார்பாகவும் சரி, ஆட்சி சார்பாகவும் சரி, செய்தியாளர்களை அதிகம் சந்தித்தவர் ஜெயகுமார் தான்.

1991, 2001, 2006, 2011 மற்றும் 2016 தேர்தலில் ராயபுரம் தொகுதியிலிருந்து போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த ஆட்சியில் மீன்வளத்தறை அமைச்சராக இருந்தார். மிகவும் எதார்த்தமான மனிதரான அவர், தனது மலரும் நினைவுகள் குறித்து பல முறை பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.
சார்பட்டா பரம்பரை படம் வந்த போது, தனது கல்லூரி காலத்தில் எப்படி இருந்தேன் என்பது குறித்து கூறியதுடன், தானும் ஒரு பாக்ஸிங் வீரர் என்று விளையாடி இருப்பார். மேலும் திருமண விழாமேடைகளுக்கு சென்றால் எம்ஜிஆர் பாடல்களை அழகாக பாடுவார். பாடுவது , பாக்ஸிங் செய்வது என்று தனது விஷயங்களை அவ்வப்போது ட்விட்டரிலும் அதை பதிவிடுவார்.

இந்நிலையில் நேற்று ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார் . அந்த புகைப்படம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அது கல்லூரியில் பட்டம் பெற்ற புகைப்படம் ஆகும். அந்த புகைப்படத்துடன் ஜெயக்குமார் வெளியிட்டிருந்த பதிவில், "நான் பிறந்த மண்ணான காசிமேடு பகுதியிலும் எனது குடும்பத்திலும் முதல் பட்டதாரியாக பச்சையப்பன் கல்லூரியில் 1981-ஆம் ஆண்டு வேதியியல் பட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்ற பெருமையான தருணம்! என்றும் கல்வியே பெருஞ்செல்வம்!" என்று கூறியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications