விபத்து நடந்த உடனேயே மருத்துவமனைக்கு சென்றது எப்படி? விமர்சனங்களுக்கு செந்தில் பாலாஜி பதிலடி!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாயினர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு விரைந்தார். இந்த நிலையில் விபத்து நடந்த உடனே செந்தில் பாலாஜி மருத்துவமனைக்குச் சென்றது எப்படி? என கேள்வி எழுந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார் செந்தில் பாலாஜி.
நடிகர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து கேள்விப்பட்டவுடன் தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும் கரூர் திமுக மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர் உரிய மருத்துவ சிகிச்சை வழங்க மருத்துவரிடம் கேட்டுக் கொண்டார்.

கரூர் கூட்ட நெரிசல்
மேலும் மருத்துவ செலவுகளை தாங்களே செலுத்துவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் விபத்து நடந்த உடனே மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி எப்படி சென்றார்? எனவும், இந்த விவகாரத்தில் சதி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏவும் ஆன செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் கூட்டம் நடந்தபோது நிகழ்ந்தது என்ன? மருத்துவமனைக்கு உடனடியாக சென்றது எப்படி? என பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
செந்தில் பாலாஜி
செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கரூரில் கடந்த 27ஆம் தேதி நடந்த துயர சம்பவம் மிக கொடுமையானது, எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். கூட்டம் நடத்தும்போது, எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என கணித்து அதற்கேற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டியது ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பு. கரூர் லைட் அவுஸ் கார்னரில் அதிகபட்சம் 7000 பேர் நிற்கலாம், உழவர் சந்தை அருகே அதிகபட்சம் 5000 பேர் கூடலாம். கூட்டநெரிசல் அதிகமாகும்போது, ஜெனரேட்டர் அறை தடுப்புகளை உடத்து உள்ளே விழத்தொடங்கினர், அப்போதுதான் ஜெனரேட்டர்கள் ஆஃப் செய்யப்பட்டது.
41 பேர் பலி
அப்போது கூட சாலை விளக்குகள் ஆஃப் செய்யப்படவில்லை. அவர்கள் கூடுதலாக அமைத்த விளக்குகள் மட்டும் ஆஃப் செய்யப்பட்டது. வீடியோவில் எல்லம் தெளிவாக உள்ளது, எங்கும் மின் விநியோகம் தடைபடவில்லை. "கரூரில் மட்டும் எப்படி நெரிசல் ஏற்பட்டது என்ற கேள்வி, "தினமும் நான் வாகனத்தில் செல்கிறேன். இன்று மட்டும் எப்படி எனக்கு விபத்து நடந்தது?" என்று கேட்பதுபோல் உள்ளது! விஜயின் ஒவ்வொரு கூட்டத்திலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மயக்கமடைந்துள்ளனர்.
மருத்துவமனைக்கு சென்றது எப்படி?
குறிப்பாக விபத்து நடந்த உடனேயே எப்படி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி சென்றார் என கேள்வி எழுப்புகிறார்கள். உண்மையில் சம்பவம் நடந்த அன்று எனது வீட்டில் திமுக கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகிகளை சந்தித்து விட்டு, பின்னர் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். இதே அலுவலகத்தில் தான் அமர்ந்திருந்தேன். இங்கிருந்து அமராவதி மருத்துவமனை எவ்வளவு தூரம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். விபத்து நடந்து விட்டது என தகவல் கிடைத்த உடனேயே அதாவது 7.47 மணிக்கு நான் அமராவதி மருத்துவமனைக்கு சென்று விட்டேன்.
அரசியல் விமர்சனம்
அது தொடர்பான வீடியோ ஆதாரங்களை கூட சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன். மேலும் அதிமுக மாவட்ட செயலாளர் எட்டு மணிக்கே கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டார். இப்படி இருக்க அவர் குறித்து கேள்வி எழுப்பாமல் நான் எப்படி உடனடியாக சென்றேன் என கேள்வி எழுப்புவது ஏன் என தெரியவில்லை? யாராக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என்பதால் தான் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றோம். இதுகுறித்து கேள்வி எழுப்புவது வேடிக்கையாக இருக்கிறது" என விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications