ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கூட்டுச் சதி? சிண்டிகேட் அமைத்த கான்ட்ராக்டர்கள்! சிக்குகிறார் வேலுமணி?
சென்னை: சென்னையில் ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அந்தப் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனங்கள் இப்போது ஆடிப் போயுள்ளன.
மேலும் ஒப்பந்தத்தை நிறுவனங்களுக்கு கொடுக்க காரணமான அதிகாரிகள் முதல் அப்போது அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி வரை பலர் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானதாக கூறப்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தத்தில் பணிகள் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அந்த வகையில் சென்னை தி.நகர் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தப் பணியை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு வேண்டப்பட்ட பெரிய நிறுவனம் ஒன்றுக்கு மொத்தமாக கொடுக்கப்பட்டு, பிறகு அந்த நிறுவனம் பணிகளை சப் கான்ட்ராக்ட் முறையில் பிரித்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி
மனிதர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் உருவாக்குவதன் அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்தவகையில் எங்கு ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படுகிறதோ, அங்கு கழிவுநீர் வடிகால் முறையாக அமைக்கப்பட வேண்டும் என்பது அந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இந்நிலையில் சென்னை தியாகராயர் நகர் பாண்டிபஜாரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது மழைநீர் தேங்கி நிற்கின்றன.

வடிகால் இல்லை
இதற்கு காரணம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகளை செய்த ஒப்பந்ததாரர்களின் அஜாக்கிரதை தான் எனக் கூறப்படுகிறது. அகண்ட நடைபாதை, வைஃபை, பாதசாரிகளுக்கு இருக்கைகள், வண்ண வண்ண ஓவியங்கள், மல்டி லெவல் கார் பார்க்கிங், என அழகூட்டிய ஒப்பந்ததாரர்களுக்கு மழை பெய்தால் அந்த நீரை எவ்வாறு வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வில்லை போல. அதனால் தான் மொத்தமாக சிமெண்ட் கலவையை கரைத்து ஊற்றி வடிகால் பகுதி காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த நிறுவனங்கள்
சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை பொறுத்தவரை குறிப்பிட ஒரு நிறுவனம் என்றில்லாமல் சிண்டிகேட் முறையில் பல ஒப்பந்த நிறுவனங்களுக்கு பல்வேறு பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாண்டி பஜார் மல்டி லெவர் கார் பார்க்கிங் கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானதாக கூறப்படும் கே.சி.பி. இஞ்சினியர்ஸ் நிறுவனம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேபோல் ஏஸ் டெக், குருமூர்த்தி இஞ்சினியரிங், ஜி.சி. இன்ப்ராஸ்ட்ரக்சர், உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஏற்கனவே சென்னை மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளை செய்து வருவதால், மேற்கண்ட இந்த நிறுவனங்களுக்கும் ஸ்மார்ட் சிட்டி நிதியில் பல வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

திட்ட மதிப்பு
சென்னை தியாகராயநகர் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த நிதியை எந்தெந்த பணிகளுக்கு எப்படியெல்லாம் பிரித்து செலவிடப்பட்டது என்ற தகவல் இன்னும் மர்மமாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொத்தத்தில் சென்னை தி.நகர் ஸ்மார்ட் சிட்டி பணிகளை சப் காண்ட்ராக்ட் முறையில் நான்கு நிறுவனங்கள் செய்துள்ளதால் அந்த 4 நிறுவனங்களுமே விரைவில் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படும் எனக் கூறப்படுகிறது. பிளாக் லிஸ்டில் நிறுவனத்தின் பெயர் வந்துவிடக் கூடாது என்பதால் அவர்கள் தரப்பிலிருந்து இவ்விவகாரத்தில் மேலும் சில தகவல்கள் வெளிச்சத்திற்கு வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வசமான வாய்ப்பு
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஏக கோபத்தில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார் எனக் கூறுகிறார்கள் உள் விவரமறிந்தவர்கள். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக எதுவும் சிக்காததால், ஸ்மார்ட் சிட்டி ஊழல் விவகாரத்தில் எஸ்.பி.வேலுமணி மீது முதல்வர் தனது பிடியை இறுக்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சென்னை மட்டுமல்லாமல் மதுரையிலிருந்தும் புகார்கள் குவிந்து வருவதால் ஸ்மார்ட் சிட்டி ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications