Exclusive: பழனிசாமிக்கு பதவி வெறி! கூலிக்கு ஆள் இறக்கிய கும்பல்! வெடிக்கும் வெல்லமண்டி நடராஜன்!
சென்னை: எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை பதவி வெறியின் உச்சத்தில் இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆவேசம் காட்டியுள்ளார்.
நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் கட்சிக்காரர்களே கிடையாது என்றும் கூலிக்கு ஆள் பிடித்து ஒரு கும்பல் அழைத்து வந்தது எனவும் விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் வெல்லமண்டி நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவு மாவட்டச் செயலாளர்களில் வெல்லமண்டி நடராஜனும் ஒருவர் என்பதால் அவரிடம் அடுத்தக் கட்ட நகர்வு குறித்து அறிவதற்காக ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது அவர் கூறியதாவது;

பதவி வெறி
''பழனிசாமி பதவி வெறியின் உச்சத்தில் இருக்கிறார் என்பது மட்டும் எனக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் நேற்று தொலைக்காட்சி பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவரை இந்தளவு அவமானம் செய்து அனுப்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. என்னைக் கேட்டால் நேற்றைய பொதுக்குழுவில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கட்சிக்காரர்களே கிடையாது. கூலிக்கு மாறடிக்கும் கும்பலை அதிமுகவில் உள்ள ஒரு கும்பல் காசு கொடுத்து அழைத்து வந்து பிரச்சனை செய்துள்ளது.''

கட்சியை அழிக்கும் செயல்
''சி.வி.சண்முகம் பேசுவதெல்லாம் என்ன முறைன்னு சொல்லுங்க, அதையும் நீங்க பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன், அவர் பேசுற விதமெல்லாம் கட்சியை நிச்சயம் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும். கட்சியின் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் தான் இருக்கு. ஆனால், போகிற போக்கில் எடுத்தோம் கவிழ்த்தோம் என தமிழ் மகன் உசேனை வைத்து அடுத்த பொதுக்குழுவை அறிவிக்கிறர்கள்.''

கோபத்தின் உச்சி
''பதவியை பிடிக்க வேண்டும் என்ற வெறியில் கோபத்தின் உச்சியில் இருக்கிறது அந்த கும்பல். ஓபிஎஸ் அண்ணன் பொதுக்குழுவுக்கு வரமாட்டார் என்று தான் அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் புறப்பட்டு வருவதாக தகவல் கிடைத்ததும் அங்கு அடியாட்களை நிறுத்தி, ஓ.பன்னீர்செல்வத்தின் வாகனத்தை மண்டப வளாகத்தில் நிறுத்தக் கூடாது என வம்பு செய்தார்கள். இதெல்லாம் முறையா, நீங்களே சொல்லுங்க, கட்சிக்காரன் யாரும் இந்தளவுக்கு கீழ்தரமான வேலையில் ஈடுபடமாட்டான்.''
Recommended Video

ஓவர் தொந்தரவு
''காசுக்கு அழைத்துவரப்பட்ட கூட்டம் தான் நேற்று ரொம்ப ஆடியது. ஓபிஎஸ் அண்ணன் வேனை பஞ்சர் செய்து, என்னென்ன வகையில் எல்லாம் தொந்தரவு கொடுக்க முடியுமோ அத்தனை தொந்தரவும் கொடுத்தார்கள். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன், தலைகீழாக நின்றாலும் அவர்கள் நினைப்பது ஒரு போதும் நடக்காது. கட்சியின் சட்டதிட்ட விதிகளை அறியாத சிலர் இப்படி பேசி வருகிறார்கள். நிச்சயம் இனி அடுத்தடுத்து ஓபிஎஸ் அண்ணன் தான் வெற்றிபெறுவார்.'' இவ்வாறு ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications