Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: எந்தக் கட்சியுடனும் கூட்டணி வேண்டாம்... அதிமுக தனித்து போட்டியிட வேண்டும் -அன்வர் ராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக, பாமக, தமாகா, உள்ளிட்ட எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறார் அக்கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான அன்வர் ராஜா.

சசிகலா மீதான எதிர்ப்புக்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியிடம் தான் விடையறிய வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

ஒன் இந்தியா தமிழுக்கு இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு;

கேள்வி: அதிமுக பொன்விழா கொண்டாட்டங்கள் எப்படிச் செல்கின்றன..?

பதில்: அதிமுக பொன்விழாவை ஓராண்டுக்கு கொண்டாட தலைமை திட்டமிட்டுள்ளது. 1972-ம் ஆண்டு முதல் தொடர்ந்து கட்சியில் இருந்து வரும் சீனியர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவர்களை பாராட்டி பொற்கிழி வழங்கி கவுரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் குக்கிராமம் வாரியாக ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தவும் பிறகு பெரியளவில் மாநாடு நடத்தவும் வேலைகள் நடந்து வருகின்றன.

கேள்வி: அதிமுக அவைத்தலைவர் பதவிக்கான போட்டியில் நீங்களும் இருக்கிறீர்கள் எனக் கூறப்படுகிறதே..?

பதில்: (சிரிக்கிறார்) பத்திரிகைகளில் தான் இப்படி எழுதுகிறீர்கள், கட்சியில் சீனியர் என்ற அடிப்படையில் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் போகலாம். என்னை பொறுத்தவரை எனக்கு எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன்.

கேள்வி: அதிமுக பொன்விழாவை கொண்டாடிய சசிகலா மீது போலீஸில் புகார் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன..?

பதில்: அதிமுகவை பொறுத்தவரை நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா (ஜெயலலிதா) தான் என்பதை ஏற்கனவே பொதுக்குழுவில் தீர்மானித்துவிட்டோம். அம்மா மறைவுக்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், என மூன்று தேர்தல்களை இப்போது இருக்கும் தலைமையின் கீழ் கட்சி சந்தித்துவிட்டது. இந்த 3 தேர்தல்களிலுமே வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதில் தொடங்கி பி ஃபார்மில் கையெழுத்திடுவது வரை ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். தான் செய்தார்கள். பொதுச்செயலாளர் பதவிக்கு உரிமை கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சசிகலா தன்னை பொதுச்செயலாளர் எனக் கூறிக்கொள்வது சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டவையே. சசிகலா தன்னை பொதுச்செயலாளர் எனக் கூறுவது தான் தவறே தவிர மற்றபடி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அவர் மரியாதை செலுத்தியதில் தவறேதும் இல்லை. மறைந்த தலைவர்களுக்கு யார் வேண்டுமானாலும் மரியாதை செலுத்தலாம்.

Ex Mp Anwar Raja says, AIADMK should contest alone in urban local body election

கேள்வி: சசிகலா செய்த தவறு என்ன..? ஒற்றுமையாக செல்வோம் என மீண்டும் மீண்டும் சமாதான தூது விடுத்தும் அவரை ஏற்க மறுப்பதன் காரணம்..?

பதில்: இந்தக் கேள்வியை நீங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தான் சார் கேட்க வேண்டும். அவர் தான் இன்று அதிகாரத்தில் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் குரலாக தான் ஜெயக்குமார் பேசுகிறார். இதனால் இந்தக் கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்பதைக் காட்டிலும் எடப்பாடி பழனிசாமியிடம் கேளுங்கள்.

கேள்வி: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குறித்து அண்மையில் நீங்கள் ஒரு கருத்து தெரிவித்தீர்கள்..

பதில்: (கேள்வியை முடிக்கும் முன்பே) அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குறித்து நான் தனிப்பட்ட முறையில் எனது கருத்தை தெரிவிக்கவில்லை. திமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய நமது முன்னாள் அமைச்சர்கள் அஞ்சுகிறார்களோ? பதுங்குகிறார்களோ? ஏன் இப்படி பின் வாங்குகிறார்கள் என்ற எண்ணம் சாதாரண அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதைத் தான் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். மேற்கொண்டு இதைப்பற்றி பேச ஒன்றுமில்லை.

கேள்வி: அதிமுகவில் 50 ஆண்டுகாலம் பயணித்து வருகிறீர்கள்... மறக்க முடியாத நிகழ்வுகள் ஏதேனும் உள்ளதா..?

பதில்: மறக்க முடியாத நிகழ்வுகள் என்றால் இன்று ஒரு நாள் முழுவதும் அதைப் பற்றி மட்டுமே என்னால் கூற முடியும். அவ்வளவு நிகழ்வுகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன், 1986-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில் தலைவர் முன்னிலையில் பேச வாய்ப்பளிக்கப்பட்ட 4 நபர்களில் நானும் ஒருவன். அப்போது நான் மண்டபம் ஒன்றியச் சேர்மனாக இருந்தேன். இந்த மாநாடு முடிந்து ஒரே வாரத்தில், அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக என்னை நியமித்து எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மொத்தம் ஆட்சி மன்றக் குழுவில் 15 பேர். 14-வது நபராக அம்மாவையும், 15-வது நபராக என்னையும் எம்.ஜி.ஆர் நியமித்தார். அதிமுக ஆட்சி மன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த 15 பேரில் 13 பேர் அமைச்சர்கள், ஒருவர் எம்.பி., நான் மட்டும் தான் ஒன்றியத் தலைவர்.

இதேபோல் 2001-2006 ஆட்சியின் போது காவல்துறை மானியக் கோரிக்கையின் போது நான் பேசியதைக் கேட்ட அம்மா, எல்லா அமைச்சர்களையும் வைத்துக்கொண்டு என்னை பாராட்டி புகழ்ந்து பேசினார். இப்படி மறக்க முடியாத நிகழ்வுகள் என்றால் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

கேள்வி: திமுக ஆட்சியை பற்றிய உங்கள் பார்வை என்ன..?

பதில்: திமுக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை என மாயையான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. உள்ளுக்குள் எக்கச்சக்க தவறுகள் நடக்கிறது. இது எங்களை போன்றவர்களுக்குத் தான் தெரியும். சிமெண்ட் விலை உயர்வின் பின்னணியில் பெரிய விவகாரம் உள்ளது. இது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு ஸ்டாலின் நல்ல நிர்வாகத்தை கொடுக்கிறார் என நினைக்கத் தோன்றும். மறைமுகமாக ஏராளமான தவறுகள் நடந்து வருகின்றன. என்னைக் கேட்டால் திமுக இன்னும் திருந்தவில்லை என்று தான் சொல்வேன். ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் அமர்ந்துகொண்டு, நாங்கள் சொல்பவர்களுக்கு தான் டெண்டர் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன், ராமேஸ்வரத்தில் அண்மையில் விடப்பட்ட ஒரு சின்ன டெண்டரை கூட, திமுக நகரச் செயலாளர் தாம் சொல்பவருக்கு தான் கொடுக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுக்கு ஆணை போடுகிறார்.

கேள்வி: எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக தொடருமா..?

பதில்: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே அம்மா எங்களுக்கு வகுத்து தந்த பாதை. 2011-ம் ஆண்டு அம்மா இது குறித்து தெரிவித்த கருத்து ஓ.பி.எஸ்.க்கு நன்கு தெரியும். அதாவது உள்ளாட்சித் தேர்தல் மூலம் மட்டுமே கட்சிகாக உழைக்கும் தொண்டர்களுக்கு ஓரளவாவது வாய்ப்பு கிடைக்கும். இதனால் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் என எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல், அதிமுக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+