லாரிகளில் வீடு தேடி வரும் தாயுமானவர் திட்டம் மக்களின் வரப்பிரசாதம்! ஆமா வாடகை எங்கே? நிதியில் இழுபறி
சென்னை: தாயுமானவர் திட்டம் களப்பணியாளர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.... இதற்காகவே விற்பனையாளர்கள் மாதந்தோறும் இதற்காகத் தங்களை அர்ப்பணித்து செயல்பட்டு வருகின்றனர். ஆனால், தற்போது புதிய சிக்கல் ஒன்று இந்த திட்டத்தில் முளைத்துள்ளது.. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான போக்குவரத்து செலவு அல்லது லாரி வாடகை வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல்கள் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. என்ன நடக்கிறது? இதுதொடர்பாக அரசுக்கு விடுக்கப்படும் கோரிக்கை என்ன? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழக அரசின் முன்னோடி திட்டங்களில் ஒன்றான தாயுமானவர் திட்டம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தாயுமானவர் திட்டம்
கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டமானது, சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோரின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.
சுமார் 16 லட்சத்து 73 ஆயிரத்து 333 ரேஷன் கார்டுகளை சேர்ந்த 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பயனாளிகள் இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம், ரேஷன் கடைகளுக்கு வர இயலாத முதியவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதாகும்.
இந்த திட்டத்தின் விதிமுறைகளின்படி, ரேஷன் கடை விற்பனையாளர்கள் மாதத்திற்கு இரண்டு நாட்களை ஒதுக்கி, பயனாளிகளின் வீடு தேடிச்சென்று பொருட்களை வழங்க வேண்டும். இந்த பணிக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான லாரி வாடகையாக, ஒரு ரேஷன் கடைக்கு ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் வீதம் அரசு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ரேஷன் விற்பனையாளர்கள்
இது விற்பனையாளர்களுக்கு சுமை ஏற்படாமல் இருக்கவும், திட்டத்தை சுமுகமாக நடத்தவும் எடுக்கப்பட்ட முடிவாகும். சிவகங்கை மாவட்டத்தில் இத்திட்டம் முழுவீச்சில் நடைபெற்று வந்தாலும், தற்போது நிதி விடுவிப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக விற்பனையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், கடந்த 6 மாதங்களாக இதற்கான லாரி வாடகை தொகையை அரசு இன்னும் வழங்கவில்லை என்று விற்பனையாளர்கள் கூட்டாக புகார் தெரிவித்துள்ளனர்.
பொருட்களை ஏற்றி செல்வதற்கான போக்குவரத்து செலவுகளை தாங்களே முன்னின்று கவனித்து வரும் சூழலில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்தத் தொகை தங்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடியைத் தருவதாக சொல்கிறார்கள்.. குறிப்பாக, கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் இந்த பிரச்சனை மிக தீவிரமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ரேசன் லாரி வாடகை
இது குறித்து கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் சில விளக்கங்களை அளித்தனர். "மாவட்ட மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் நேரடியாக இயங்கும் ரேஷன் கடைகளுக்கு தேவையான லாரி வாடகை தொகையை அரசு ஏற்கனவே முறையாக விடுவித்துவிட்டது.
இருந்தாலும், கூட்டுறவு துறையின் கீழ் தனிப்பட்ட முறையில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு மட்டும் இன்னும் நிதி வந்து சேரவில்லை. இதற்கான மானியத் தொகையிலிருந்து பணத்தை விடுவிக்குமாறு கூட்டுறவு பதிவாளர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அப்படி உத்தரவு வரும் பட்சத்தில், உடனடியாக நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள்..
சிவகங்கை மாவட்டம்
ஆக, அரசின் உன்னதமான இந்த திட்டம் தொய்வின்றி தொடர வேண்டுமானால், களத்தில் பணியாற்றும் விற்பனையாளர்களின் குறைகளை களைவது அவசியமாகிறது. வாடகை தொகையை உடனடியாக விடுவிப்பதன் மூலம், எந்தவித மனக்குறையுமின்றி அவர்கள் முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சேவை செய்ய முடியும்.
எனவே தமிழக அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு, இழுபறியில் உள்ள லாரி வாடகையை விரைவாக வழங்க வேண்டும் என்பதே சிவகங்கை மாவட்ட விற்பனையாளர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. திட்டத்தின் பலன்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய, நிர்வாக ரீதியான இத்தகைய தடைகளை நீக்குவது காலத்தின் தேவையாகும் என்பதையும் நாம் இங்கே குறிப்பிட வேண்டி உள்ளது..!!












Click it and Unblock the Notifications