ஜூன் 4 முதல்.. தமிழ்நாடு முழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு "சுயம்வரம்".. எந்தெந்த இடங்களில் தெரியுமா?
சென்னை: தமிழகம் முழுவதும் 11 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
உடல் குறைபாடு, புலன் குறைபாடு (பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல்), அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு மற்றும் சில நோய்கள் தொடர்பான குறைபாடு உள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர்..
இது இவர்களின் குற்றமல்ல... மரபணுவினால் பிறப்பிலேயே ஏற்படும் மாற்றங்கள், தாயின் கருவில் இருக்கும்போது அல்லது பிறந்தவுடன் ஏற்படும் நோய்கள் மூலம் ஏற்படும் மாற்றங்கள், கடுமையான நோயினாலோ, விபத்தினாலோ உருவாகும் மாற்றங்கள், வேறு தெரியாத சில காரணங்கள் போன்றவைதான், மாற்றுத்திறன் என்பதை வகைப்படுத்துகிறது.

மாபெரும் திறமைசாலிகள்: உடலிலோ, மனதிலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, ஒருசில செயல்களை செய்யமுடியாமல் போய்விடுகிறது.. அவ்வளவுதான்.. மற்றபடி, இவர்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை. யாருக்கும் குறைந்தவர்களும் இல்லை.
வழக்கமாக, திருமணம் செய்ய நினைப்பவர்கள், தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் அளவுக்கு அதிகமாகவே கவனத்தை செலுத்துவார்கள்.. நல்ல உடலமைப்பு, பொருளாதார வசதி, ஜாதகம், பொருத்தம், தோஷம் இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கவனம் செலுத்துவார்கள்.. இதனாலேயே பலருக்கும் திருமணம் என்ற விஷயமே தள்ளிப்போய் விடுகிறது.
சுயம்வரம்: ஆனால், மாற்றுத்திறனாளிகள் அப்படி கிடையாது... அழகு, உடலின் நிறம், இதுக்கெல்லாம் முக்கியத்துவம் தந்து, துணையை தேடி கொண்டிருக்க முடியாது.. நேரில் பார்த்தோ அல்லது விசாரித்தோ, தங்களுக்கேற்ற துணை யார் என்பதை முடிவுசெய்கிறார்கள்.. அந்தவகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் என்பது மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்து வருகிறது.. இதனை எதிர்கொள்ளும் விதமாகத்தான் சுயம்வரம் விழாவும் நடத்தப்பட்டு வருகின்றன..
இப்படி ஒரு உயர்வான நிகழ்வை, வருடாவருடம், தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை சிறப்பாக செய்து வருகிறது.. இந்த வருடமும் செய்ய போகிறது. இதற்கான செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது.. அதில், "மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இணைந்து கடந்த 11 ஆண்டுகளாக திருமணம் நடத்தி வருகிறது.

4ம் தேதி நடக்கிறது: 12-வது ஆண்டாக தமிழகம் முழுவதும் 11 இடங்களில் சுயம்வர நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. சுயம்வரமானது திருவாரூர் (ஜூன் 4), கடலூர் (ஜூன் 18), கோவை (ஜூன் 25), ஈரோடு (ஜூலை 2), விழுப்புரம் (ஜூலை 9), திருவண்ணாமலை (ஜூலை 15), வேலூர் (ஜூலை 23), அரியலூர் (ஜூலை 23), விருதுநகர் (ஆக.5), மதுரை (ஆக.6), சென்னை (ஆக.13) நகரங்களில் நடைபெறவுள்ளது.
இதில் தேர்வாகும் மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு செப்.9-ந் தேதி மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து நவ.19-ந் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு www.tndfctrust.com எனும் இணையதள முகவரியில் அணுகலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சொர்க்கம்: இந்த அறிவிப்பானது மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. நல்ல மனங்கள் கூடும் இடங்களே சொர்க்கமாகும்.. அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளின் திருமணங்களும் சொர்க்கத்திலேயே நிச்சயிக்கப்பட்டிருக்கின்றன.. வெளிச்சம் தொடர்ந்து பரவட்டும்..!!!












Click it and Unblock the Notifications