EXCLUSIVE: தமிழ் மொழி அழிந்தால் பண்பாடு அழிந்துவிடும்.. பாஜகவின் "தந்திரமான" பிளான்! ஆ.ராசா வார்னிங்
சென்னை: தகத்தாய சூரியன் என்று முன்னாள் முதல்வர், முன்னாள் திமுக தலைவர் மு கருணாநிதியால் புகழப்பட்டவர் ஆ. ராசா. மனதில் தோன்றியதை உள்ளது உள்ளபடி சொல்லும் அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவர்.
திமுகவின் துணை பொதுச்செயலாளராகவும், எம்பியாகவும் பதவி வகித்து வரும் ஆ. ராசா, இந்திக்கு எதிராகவும், இந்துத்துவாவிற்கு எதிராகவும் கடுமையான கருத்துக்களை வலிமையாக வைத்து வருகிறார்.
முக்கியமாக இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் ஒன் இந்தியா தமிழ் சார்பாக எம்பி ஆ. ராசாவை பேட்டி கண்டோம். பேட்டியில் பல சுவாரசியமான விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். அதில்,

மறைமலையடிகள்
தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்தியை எதிர்த்து வந்துள்ளனர். இந்தியை நாம் தொடர்ந்து எதிர்த்தும் இங்கே இந்தியை கொண்டு வர பார்ப்பது ஏன் என்று நினைக்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் திமுக, திக மட்டுமல்ல, அவர்களுக்கு முன்பே மறைமலையடிகள் காலத்திலேயே தொடங்கிவிட்டது. சைவமும், தமிழும் இரண்டு கண்கள் என்று சொன்ன மறைமலையடிகள் காலத்திலேயே இதற்கு எதிரான போராட்டம் தொடங்கிவிட்டது. வடக்கர்கள் இந்தியை திணிப்பேன், தன் மொழியை கொண்டு வருவேன் என்று கூறினால் அதை எதிர்ப்போம் என்பதுதான் தமிழர்களின் நிலைப்பாடு. அதை தொடர்ந்து தமிழ்நாடு செய்து வருகிறது. ஆனால் பாஜக இதை விரும்பவில்லை. அவர்களுக்கு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே உடை இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்று நேரு கூறினார். ஆனால் இவர்கள் ஒற்றுமையில் வேற்றுமையை கொண்டு வர பார்க்கிறார்கள். மொழிக்கும் பண்பாட்டிற்கும் இருக்கும் அடையாளம் நினைத்தது.

இந்தி மொழி திணிப்பு
இந்தியர்களுக்கு இடையில் பாலம் போல இந்தி இருக்க வாய்ப்பு இருக்கிறதா? பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி அது என்கிறார்களே?
பெரும்பான்மை மக்களுக்கு இந்தி தாய் மொழியா? பெரும்பான்மை வேறு.. ஆனால் அது அவர்கள் தாய் மொழியா. நான் ஒரு 15 மாதம் ஜெயிலில் இருந்தேன். இந்தி எப்படி இணைப்பு மொழியாக இருக்க முடியும், ஒரு அரசாங்கம் வரும் போது, அவர்களின் மொழி புழக்கத்திற்கு வருவது இயற்கை. நான் மத ரீதியாகவே சொல்கிறேன். பௌத்தம் வந்த போது பாலி இருந்தது, சமணம் வந்த போது பிராகிருதம் இருந்தது, விஜயநகர பேரரசு வந்த போது தெலுங்கு வந்தது, மராட்டியர்கள் வந்தார்கள் இப்போதும் மதுரை மராத்தி இருக்கிறது, பிரெஞ்சுக்காரர்கள் வந்த போது பிரென்சு பாண்டிச்சேரியில் வந்தது, இஸ்லாம் வந்த போது உருது வந்தது. ஒரு ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்த போது, தங்கள் மொழியை பரப்புவது இயற்கை. ஆனால் யாரும் தங்கள் மதத்தை திணித்தது இல்லை. ஆனால் இவர்கள் தங்கள் மொழியை திணிக்கிறார்கள்.

தமிழ் கலாச்சாரம்
தமிழை பேச கூடாது என்று பாஜக சொல்லவில்லையே? தமிழை பல இடங்களில் பாஜக கொண்டாடுகிறதே?
பாஜகவின் செயலே உண்டு செரிப்பதுதான். அதுதான் அவர்களின் தத்துவமே. அதுதான் அவர்களின் தந்திரமே. நெருக்கமாக இருப்பது போல காட்டி மொழியை அழிப்பார்கள். நான் ஒன்று சொல்கிறேன்.. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி தொடங்கி எல்லா ஆட்சியிலும் சொல்கிறேன்.. நாங்கள் இந்தியை ஒழிக என்று சொன்னோமா? எனக்கு வேண்டாத மொழியை என் மீது திணிக்காதே என்று தானே சொன்னேன். அதை ஏன் இவர்கள் தவறு என்று சொல்கிறார்கள். நாம் தமிழ் மொழியில் இருந்து திராவிட மொழிகள் வந்தது என்று சொல்கிறோம். கன்னடர்கள் தங்கள் மொழியில் இருந்து வந்தது என்று கூட சொல்லலாம். யாரிடம் இருந்து யார் வந்தார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. நாம் எல்லாம் ஒரு குடும்ப மொழி.. திராவிட குடும்பம். இந்த மொழி என்பது.. இனத்தின் அடையாளம். திராவிடர் என்ற இனத்தின் அடையாளம். அதில் தமிழனின் அடையாளம் தமிழ். நமக்கு என்று பண்பாடு இருக்கிறது. நமது பண்பாடு மொழியில் கை வைத்தால் போய்விடும். மொழியை அழித்தால் பண்பாடு போய்விடும். இதற்குத்தான் அவர்கள் நேசக்கரம் நீட்டுகிறார்கள். இதுதான் அவர்களின் தந்திரம்.

ஆங்கிலம் மட்டும் ஏன்
நீங்கள் ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்கிறீர்களே, உங்கள் மொழி அழிந்ததா என்று ஆர்எஸ்எஸ், பாஜக வாதம் வைக்கிறதே?
ஆங்கிலம்தான் உலக அறிவை, உலக தொடர்பை எங்களுக்கு உண்டாக்கியது. அது அறுந்துவிட கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உலக அளவில் நாம் முன்னேற இது காரணம். இந்தியில் இவர்கள் மருத்துவம் படிக்க வைப்பேன் என்கிறார்கள். அப்போது மாநில மக்கள் எப்படி விரும்புவார்கள். உலக அறிவு என்ற ஒன்று உள்ளது. நான் வெளிநாடு செல்கிறேன்.. அங்கு போய் மருந்து பெயரை ஆங்கிலத்தில் சொன்னால் கேட்பார்கள். அதுதானே உலக அறிவு. ஆங்கிலம் அதற்கு உதவுகிறது.

இந்தியை வைத்து அரசியல்
இந்தியை வைத்து திமுக அரசியல் செய்கிறது.. இந்தியை வாக்கிற்காக பயன்படுத்துகிறது என்று பாஜக குற்றஞ்சாட்டுகிறதே?
நடைமுறையில் சாதாரண வார்த்தைகளை தமிழுக்கு கொண்டு வந்ததே நாங்கள் தானே. தமிழ் மொழிக்கு ஒரு பெரிய நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் உள்ளது. மொழிக்கும் பண்பாட்டிற்கும் பெரிய தொடர்பு உள்ளது. அந்த பண்பாடு சிறந்ததாக இருந்தது. யாதும் ஊரே யாரும் கேளீர் என்று சொன்னோம். இதுதான் நம்முடைய கலாச்சாரம். இது வேறு மொழியில் இருக்கிறதா.. இப்படிப்பட்ட கலாச்சாரம் மொழியோடு இணைந்து இருக்கிறது. அதை நாம் காப்பாற்ற வேண்டும், என்றுதான் சொல்கிறேன், என்று ஆ. ராசா தனது பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications