சேலம் பாஜக கூட்டத்தில் அவமானப்பட்டாரே! அப்பகூட ஓபிஎஸ்ஸுக்கு வெட்கமே இல்லை.. ஜெயக்குமார் விமர்சனம்
சென்னை: சேலம் பொதுக் கூட்டத்தில் அவமானப்படுத்தப்பட்ட ஓபிஎஸ்ஸுக்கு வெட்கமே இல்லை, எதை சொன்னாலும் துடைத்து போட்டுவிட்டு போய்விடுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒன் இந்தியா அரசியல் யூடியூப் தளத்திற்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் 3 தொகுதி தருவதாகவும் இல்லாவிட்டால் ஒரு தொகுதிதான் என்றும் பாஜக கறார் காட்டியது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜெயக்குமார் கூறியிருப்பதாவது: ஒபிஎஸ் எப்போதும் ஒரு சுயநலவாதி, சந்தர்ப்பவாதி, குழப்பவாதி. தெளிவான ஒரு முடிவை எந்த சூழலிலும் அவரால் எடுக்கவே முடியாது. ஏற்கெனவே அதிமுகவுக்கு துரோகம் விளைவித்தவர். சட்டவிதிகளின் படி கூட்டப்பட்ட பொதுக் குழுவால் ஓபிஎஸ் நீக்கப்பட்டவர்.
எனவே அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அது போல் கட்சிக் கொடி, லெட்டர்பேட், சின்னம், உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்துவதற்கும் உயர் நீதிமன்றம் தடைவிதித்துவிட்டது. அதிமுக கரை வைத்த வேட்டி கூட அவர் கட்டக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது. இப்போது அவர் பாஜகவுடன் ஐக்கியமாகிவிட்டார்.
எப்போதும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டையே அவர் எடுத்திருந்தார். அந்த வகையில் அவருக்கான மரியாதை பாஜகவிலாவது இருக்கிறதா என்றால் அங்கும் இல்லை. சேலம் பொதுக் கூட்டத்தில் ஓபிஎஸ் மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே அங்கிருந்த பாஜக நிர்வாகி கே.பி.ராமலிங்கம், அவரது பேச்சை நிறுத்த சொன்னார்.
ஒரு முன்னாள் முதல்வர் என்று கூட பாராமல் அவரை அவமானப்படுத்திவிட்டார்கள். இதற்காக ஓபிஎஸ் வெட்கப்பட வேண்டும். வேதனைப்பட வேண்டும். ஆனால் அவர் வெட்கமும் படமாட்டார், வேதனையும் படமாட்டார், அதெல்லாம் தூசு என துடைத்து போட்டுவிட்டு போய்க் கொண்டே இருப்பார். ஓபிஎஸ்ஸுக்கு பின்னால் எந்த கூட்டமும் இல்லை என்பதை மற்ற கட்சியினர் தெரிந்து கொள்கிறார்கள்.
எங்கள் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என நோக்கில் ஒரு 4 , 5 பேரை வைத்துக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறாரே ஒழிய, அவருக்கு பின்புலம் இல்லை என்பது பாஜகவுக்கு தெரிகிறது. அதனால் அவரை அவமானப்படுத்துகிறார்கள். ஓபிஎஸ்ஸுக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதை நினைத்து நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன்.
அதிமுகவுக்கு அவர் செய்த துரோகங்கள்தான் இன்று அவருக்கு திருப்பி அடிக்கிறது என்றுதான் சொல்ல முடியும். பாஜகவுக்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தாலும் சரி போட்டியிட்டாலும் சரி ஒன்றும் ஆக போவதில்லை, ஓபிஎஸ்ஸால் தமிழகத்தில் திருப்புமுனை ஏற்பட்டுவிடுமா? இவர் போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது. அவருக்கு முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் இருப்பதாக அவர்தான் சொல்லிக் கொள்கிறார். அப்படி எதுவும் இல்லை.
அதிமுகவில் சட்டவிதிகளுக்கு கட்டுப்பட்டு இருந்திருந்தால் நாங்கள் அவர் மீது நடவடிக்கையே எடுத்திருக்க மாட்டோம். ஆனால் இவர் ஏற்றி விட்ட ஏணியையே எட்டி உதைத்துவிட்டார். இதை எந்த தொண்டரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தன்னை அடையாளம் காட்டிய இயக்கத்திற்கு பெரும் துரோகம் செய்தவர். இவருக்கு பலம் இல்லை என தெரிந்ததாலேயே பாஜக அவமானப்படுத்துகிறது.
இனி ஓபிஎஸ் திருந்தி வந்தாலும் அவரை அதிமுகவில் ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை. டிடிவி தினகரனுக்கு ஒரு தொகுதியில் போட்டியிடத்தான் ஆள் இருக்கிறது. பாஜகவுக்கும் தொகுதிகளை வாங்க ஆள் இல்லை. அதனால் ஒன்றுக்கு பதில் இரண்டு தொகுதிகளாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.
பொதுவாக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைத்தான் கேட்பார்கள். ஆனால் டிடிவியோ "நான் ஒன்று கேட்டேன், இரண்டாக வைத்துக் கொள்ளுங்கள் என கொடுத்துவிட்டார்கள்" என டிடிவி சொல்வதை பார்த்தால் அவரிடமும் வேட்பாளர்கள் இல்லை, பாஜகவின் பலவீனத்தையும் இது காட்டுகிறது. கருத்துக் கணிப்புகளை ஏன் நம்புகிறீர்கள், ஜூலை 4ஆம் தேதி பாருங்கள், பிரதானமாக அதிமுக இருக்கும். அதற்கு அடுத்த இடத்தில் திமுக இருக்கும். பிறகுதான் மற்ற கட்சிகள். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications