Exclusive: எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சி ஆரம்பம்.. டிசம்பரில் இருக்கு அதிரடி.. நாஞ்சில் கோலப்பன்
சென்னை: துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை, இந்த நிலைமை நீடித்தால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுக ஆட்சி அமைக்க முடியாது, அதிமுக வீறுகொண்டு எழ வேண்டுமென்றால், பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ்ஸின் திட்டம் பற்றி ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53வது ஆண்டு விழா அதிமுகவினரால் அண்மையில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026இல் அதிமுக ஆட்சி அமைந்திடுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

பாய்ந்து வந்த ஓபிஎஸ்: எடப்பாடி பழனிசாமிக்கு சேதி சொல்லும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில், "ஜெயலிதாவின் மறைவிற்குப் பிறகு, துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, அதர்மங்கள் அதிகரித்து துரோகச் செயல்கள் தாண்டவமாடி, கட்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அனைவருக்குமான கட்சி என்ற நிலை துரோகக் கூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுக இன்று வெற்றிடமாக காட்சியளிக்கிறது.
முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்தவர், முதலமைச்சர் பதவியில் அமர்த்தியவர், முதலமைச்சர் பதவியில் தொடர துணை புரிந்தவர்கள் என அனைவரையும் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. இப்படிப்பட்ட 'துரோகம்' தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது." என காட்டமாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் நமது ஒன் இந்தியாவுக்கு இதுதொடர்பாக பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். வரும் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு ஓபிஎஸ் ஆட்டம் வேற மாதிரி இருக்கும் என்கிறார் நாஞ்சில் கோலப்பன்.
நாஞ்சில் கோலப்பன் பேட்டி: நாஞ்சில் கோலப்பன் பேசுகையில், "எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் ஒருங்கிணைக்க நினைக்கவில்லை. இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து துரோகம் செய்துவிட்டு, பிடிவாதம் பிடிக்கும் எடப்பாடி பழனிசாமியை ஒருங்கிணைக்க நாங்கள் தயாரில்லை. தொண்டர்களைத்தான் ஒருங்கிணைக்க முயற்சி செய்து வருகிறோம். எல்லோரும் சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும் என திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார், மூத்த தலைவர்கள் சொல்கிறார்கள். டிசம்பருக்கு மேல் அதிமுகவை நாங்கள் காப்பாற்றி விடுவோம்.
மூத்த தலைவர்கள் அதிருப்தி: எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் தான் அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவுக்கு செங்கோட்டையன், சிவி சண்முகம், தங்கமணி எல்லாம் வரவில்லை. எடப்பாடியின் போக்குகள் சரியில்லை, கூட்டுத் தலைமை இருந்தால் தான் ஜெயிக்க முடியும் என பெரும்பாலான தலைவர்கள், தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. கட்சி ஒன்றிணைய வேண்டுமா, வேண்டாமா? பூத்தில் பலமாக இருக்கிறோமா இல்லையா? என்பதை மேல் மட்டத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தால் போதாது, கீழ் மட்டத்தில் இருக்கும் ஒரு கிளைச் செயலாளர் நினைக்க வேண்டும். அதுதான் அதிமுகவின் கட்சி கட்டுமான அமைப்பு.
எடப்பாடி ஆளுமை அவ்வளவுதான்: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 7 எம்.பி தொகுதிகளில் டெபாசிட் காலி. அனைத்து இடங்களிலும் ஃபெயில். 234 தொகுதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளில் தான் அதிமுகவால் அதிக ஓட்டு பெற முடிந்தது. வாய் திறந்து பேசுவதற்கே எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை. அவரது தலைமைப் பதவிக்கு அவவ்ளவுதான் மரியாதை.
டிசம்பரில் ஆட்டம் ஆரம்பம்: ஓ.பன்னீர்செல்வம் இதுவரை நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எல்லாம் கொஞ்சம் கட்டுப்பட்டு போய்க்கொண்டிருக்கிறார். டிசம்பருக்கு பிறகு அதிரடியான செயல்பாடுகள் இருக்கும். நிச்சயமாக, கட்சியையும் சின்னத்தையும் எடப்பாடி பழனிசாமி கையில் கொடுத்து 2024 லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தது போல 2026ல் நிச்சயம் நடக்காது. எடப்பாடி பழனிசாமி நடுத்தெருவில் நிற்பார்.
பதவி வெறிக்கு முற்றுப்புள்ளி: முதலமைச்சராக இருந்தபோது கூட மாவட்ட செயலாளர் பதவியையும் விட்டுக் கொடுக்க மனமில்லாத மனிதர் எடப்பாடி பழனிசாமி. தான்தோன்றித்தனமாக பதவி வெறியில் திளைக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் ஆணவத்துக்கு 2026ல் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதில் அதிமுக தொண்டர்களும் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications