2.38 லட்சம் டன் நிலக்கரி எங்கே?- வழக்குப்பதிவு செய்ய என்ன தயக்கம்?- அறப்போர் ஜெயராமன் கேள்வி
சென்னை: 2.38 லட்சம் டன் நிலக்கரி எங்கே போனது, நிலக்கரி காணாமல் போனதுக்கு பின்னால் மிகப் பெரிய கதைகள் இருப்பதாகவும் நிலக்கரி ஊழல் எப்படி நடக்கிறது என்பது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் விளக்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து 2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போயுள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:
கே: நிலக்கரி ஊழல் குறித்து சொல்லுங்கள்
ப: நிலக்கரியானது 2.38 லட்சம் டன் அளவுக்கு காணாமல் போயுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். நிலக்கரியில் நிறைய ஊழல்கள் நடந்துள்ளன. இந்த காணாமல் போன ஊழலுக்கு பின்னர் நிறைய கதைகள் உள்ளன. நிலக்கரியை அனல்மின் நிலையங்களில் மின்சாரத்தை எடுப்பதற்காக 50 சதவீதம் உள்நாட்டிலிருந்து மீதியை வெளிநாட்டிலிருந்தும் இறக்குமதி செய்கிறோம். வெளிநாட்டு நிலக்கரியில் தரம் அதிகமாக இருக்கும். 6000 கிலோ கொண்ட நிலக்கரியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய தொடர்ந்து 10 ஆண்டுகளாக டென்டரானது போடப்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி இறக்குமதி செய்யக் கூடிய டென்டர்களில் இரண்டு விதமான ஊழல்களை செய்கிறார்கள்.
ஒன்று, அதன் சந்தை மதிப்பில் கிட்டதட்ட 10, 20 டாலர்கள் அதிகமாகவே கொடுத்து வாங்கி வருகிறார்கள். இது 2012 முதல் 2016 வரை நடந்தது. இதன் மூலம் கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் அதிக விலைக்கு நிலக்கரியை வாங்குவது குறித்து 2018 இல் வெளிக் கொண்டு வந்த போது அதிக விலைக்கு வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். 2012 முதல் 2016 வரை அதானி நிறுவனமே 50 சதவீத டெண்டரை பெற்றார்கள். 2.44 கோடி டன் இறக்குமதி செய்யப்பட்டால், அதில் 1.2 கோடி டன் அதானி நிறுவனத்திற்கு கொடுக்கப்படுகிறது. இதை இவர்கள் மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்களா என்றால் இல்லை. வெறும் 3 நிறுவனங்கள் மட்டுமே போட்டியிடும் அளவுக்கு நிபந்தனைகள் மாற்றப்பட்டுள்ளன. இதை சிஏஜி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது அதன் தரத்தில் ஊழல் நடக்கிறது. 6000 கிலோ நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறதென்றால் அத்தனையும் உள்ளே வராது. மாறாக 4000 முதல் 5000 கிலோ வரை மட்டுமே வரும். சுங்கவரித் துறை செய்யும் சோதனையில் 4000 முதல் 5000 கிலோ வரை மட்டுமே இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மின்சார வாரியமும் மீண்டும் ஒரு முறை அதன் எடையை சோதனை செய்யும் போது 6000 கிலோ சரியாக இருப்பதாக கணக்கு எழுதுகிறார்கள். இப்படித்தான் இந்த ஊழலை கண்டுபிடிக்கிறோம். இதனால் மூன்றில் ஒரு பங்கிற்கு 800 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் ரூ 2500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இந்த ஊழல்களை லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்துள்ளோம்.
இந்த அனல் மின் நிலையங்களில் நிலக்கரியை எரிக்கும் போது குறைந்த அளவிலான அதன் செயல்திறனும் குறைவாக இருக்கும் என்பதால் கூடுதலாக நிலக்கரியை பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த கூடுதல் நிலக்கரியை யாரும் கணக்கு காண்பிப்பதில்லை. கையில் இருப்பு இருக்கும் நிலக்கரியை எரித்துவிட்டு அடுத்தடுத்து டெண்டர் போட்டு புதிய நிலக்கரியை எரிக்கிறார்கள். இதன் இருப்பு சரிபார்க்கும் போது 5 லட்சம் டன் நிலக்கரி இருந்திருக்க வேண்டிய நிலையில் தற்போது 3.5 லட்சம் டன் நிலக்கரிதான் இருக்கிறது. 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என்கிறார்கள். இந்த இறக்குமதி ஊழல் அமைச்சர் மட்டத்திலிருந்து செய்யப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே: இந்த ஊழல் குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சில ஆதாரங்களை கொடுத்துள்ளீர்களே, ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
ப: நாங்கள் வழக்கு போடவில்லை. இதை டெல்லியில் உள்ள சிலர் போட்டியிருந்தார்கள். இது மிக பெரிய அளவில் விசாரணை நடக்கவே இல்லை. மனோஜ்குமார் என்பவர் வீட்டில் பாஸ்மதி அரிசி ஊழல் குறித்து சிபிஐ போலீஸார் ரெய்டு செய்யும் போது ஒரே நிலக்கரிக்கு இருவேறு சான்றிதழ்களை கண்டறிந்தார்கள். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் 4500 கிலோ என்பது இந்தோனேஷியாவில் இருந்து வந்த நிலக்கரியின் தரச் சான்றிதழ். 6000 கிலோதான் மகாராஷ்டிராவுக்கு அனுப்பப்பட்டது. இது இந்தியா முழுவதும் நடந்திருக்கிறது, தமிழகத்திலும் நடந்திருக்கிறது என டிஆர்ஐ (Directorate of Revenue Intelligence) அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் சிபிஐ இதை கையில் எடுத்து ஆரம்பகட்ட விசாரணையை கூட முடிக்கவில்லை. எஃப்ஐஆர் கூட போடப்படவில்லை. வெளிநாட்டிலிருந்து 4500 கிலோ நிலக்கரியை கொண்டு வரும் கப்பல் தற்போது வருகிறது, அதை சோதனை செய்து முதல் தகவல் அறிக்கை போடுமாறு நாங்கள் டிஆர்ஐ அதிகாரிகளிடம் புகார் கொடுத்தோம். ஆனால் அவர்கள் அதையும் செய்யவில்லை.

கே: 2018ஆம் ஆண்டு நிலக்கரி ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாரே அது என்னவாயிற்று
ப: ஸ்டாலின் கோரிக்கை விடுத்தும் இதுவரை சிபிஐ விசாரிக்கவே இல்லை. நாங்கள் கொடுத்த புகாரை லஞ்ச ஒழிப்புதுறையில் மீண்டும் விசாரிப்பதாக சொல்லியுள்ளார்கள். லஞ்ச ஒழிப்பு துறையில் நாங்கள் கொடுத்த நிலக்கரி ஊழல் புகாரின் விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிய தகவல் அறியும் சட்டத்தில் கேட்டிருந்தோம். உடனே ஆரம்ப கட்ட விசாரணையை முடித்துவிட்டோம் என அவசர அவசரமாக பதில் கொடுக்கிறார்கள். அந்த ஆரம்ப கட்ட விசாரணை முடிவு குறித்த நகலை தருமாறும் ஆர்டிஐயில் கேட்டிருந்தேன், அதற்கும் பதில் இல்லை. தற்போது புதிய அரசு அமைந்துள்ளதால் மீண்டும் எங்களது ஆதாரங்கள், புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பி இதை உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என இருமாதங்களுக்கு முன்பே கோரிக்கை வைத்துள்ளோம். அவர்கள் முதலில் எஃப்ஐஆர் பதிவு செய்தால் மட்டுமே அடுத்த ஸ்டேஜிற்கு வழக்கு செல்லும் என்றார் ஜெயராம். அறப்போர் இயக்கம் ஜெயராமனின் பேட்டியை முழுவதும் தெரிந்து கொள்ள இதனுடன் இணைத்துள்ள லிங்கை பார்க்கவும்.












Click it and Unblock the Notifications