2024 ல் விஜய் அரசியலுக்கு வந்தால்.. எந்த கட்சிக்கு முக்கிய பாதிப்பு தெரியுமா? முக்கிய புள்ளி தகவல்
சென்னை: அரசியலுக்கு வரவேண்டும் என ரஜினிகாந்திற்கு இருந்த எதிர்பார்ப்பு விஜய்க்கு இல்லை என மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். அது போல் விஜய் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
234 தொகுதிகளிலும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத் தொகையை வழங்கினார். இந்த விழாவை ஏற்பாடு செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி அவர் கைப்பட கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் நண்பா என குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

இந்த நிலையில் கல்வி விருது விழா சிறப்பாக நடைபெற உழைத்த இயக்க நிர்வாகிகளுடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக இன்றைய தினம் பனையூர் பங்களாவில் அவர்களை சந்தித்தார். விஜய்யின் அடுத்தடுத்த விஷயங்கள் அவர் மீதான அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்தர் துரைசாமி ஒன் இந்தியா அரசியலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் இதுவரை அரசுக்கு எதிராகவோ திமுகவுக்கு எதிராகவோ உதயநிதிக்கு எதிராகவோ எதையும் பேசவில்லை. விருது வழங்கும் விழாவில் ஒரே ஒரு பாயிண்ட்தான் அரசியல் பேசினார்.
அதாவது காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதீர்கள் என உங்கள் அப்பா, அம்மாவிடம் சொல்லுங்கள் என கூறியிருந்தார். இதை திமுகவை தாக்கி பேசினார் என சொல்ல முடியாது. விஜய்க்கு லியோ படம் முக்கியம். அவரும் தன் படத்திற்கு போட்டியில்லாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறார். 2024 இல் மோடிக்கு ஆதரவாக ரஜினி வரக் கூடிய ரோல் அவருக்கு இருக்கிறது.
அவருடைய அண்ணன் கூட ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என கூறிவிட்டார். லியோ படத்திற்கு உதயநிதி நினைத்தால் அந்த படத்திற்கு போட்டியாக ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடியும். ஆனால் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு எதிராக உதயநிதி எந்த படத்தையும் வெளியிட மாட்டார். லியோ படத்திற்காகவே விஜய் அரசியலை கையில் எடுத்துள்ளார். ஆனால் அவர் அரசியலில் இல்லை.
விஜய்யாகவேத்தான் தன்னை லைம்லைட்டில் வைத்துக் கொள்ள அடுத்தடுத்த நிகழ்வுகளை செய்து வருகிறார். மற்றபடி மக்கள் யாரும் நீங்கள் அரசியலுக்கு வாங்க என அவரிடம் கேட்கவில்லை. ரஜினிகாந்து மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ரஜினியை 60 எம்எல்ஏக்கள், 30 எம்பிக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரி அனந்தன் வீட்டுக்கே போய் சந்தித்து அரசியலுக்கு வாங்க என அழைத்தார்.

மூப்பனாரும் சைக்கிளை எடுத்து நீங்களே ஓட்டுங்கள் என்ற அளவுக்கு சொன்னார். விஜய்யை இதுவரை அரசியலுக்காக யாரும் அங்கீகாரம் செய்தது போல் தெரியவில்லை. புதுவை முதல்வர் ரங்கசாமி மட்டுமே செய்தார். விஜயகாந்த், கமல்ஹாசன் போல் விஜய்யும் அரசியலுக்கு வரலாம், அது அவருடைய உரிமை, ஆனால் எல்லோரும் அரசியலுக்கு விஜய்யை தேடுகிறார்கள் என சொல்வதெல்லாம் தவறு. 2024 இல் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் கட்சியை தொடங்கலாம். அப்படி வந்தால் சமூகநீதியை சூறையாடும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் அதிக பாதிப்பு. இவ்வாறு ரவீந்திரன் துரைசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications