வங்கதேச மோதல் பின்னணியில் யார்? இனி இந்துக்களுக்கு ஆபத்து? கேப்ரியல் தேவதாஸ் பரபர Exclusive

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கதேசத்தில் இப்போது மிகப் பெரிய அரசியல் மாற்றம் நடந்துள்ளது. அங்குப் பிரதமராக இருந்த ஹசீனா வெளியேற்றப்பட்டுள்ளார். மாணவர் போராட்டம் வங்கதேச அரசியலை மொத்தமாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இதற்கிடையே வங்கதேசத்தில் இப்போது என்ன நடக்கிறது.. அங்குச் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன என்பதை கேப்ரியல் தேவதாஸ் நமது ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் விளக்கியுள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக மிகப் பெரிய மாணவர் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்நாட்டின் பிரதமராக இருந்த ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

Bangladesh Sheikh Hasina world

இதற்கிடையே அங்கு இப்போது என்ன நிலைமை இருக்கிறது.. மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது எப்படி.. அங்கு சிறுபான்மையினர் நிலை எப்படி இருக்கிறது என்பதை ஊடகவியலாளர் கேப்ரியல் தேவதாஸ் நமது ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் விளக்கியுள்ளார்.

பின்னணி: இது தொடர்பாக அவர் கூறுகையில், "வங்கதேச விவகாரம் இந்தியாவுக்குச் சிக்கலான ஒன்று தான்.. ஹசீனா இப்போது இந்தியாவில் இருக்கிறார். அவரை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் இந்தியாவுடன் நீண்ட காலமாக நல்லுறவைக் கொண்ட தலைவராக இருந்துள்ளார். அவரது அவாமி லீக் கட்சியும் இதுவரை இந்தியாவுக்கு நெருக்கமாகவே இருந்துள்ளது. எனவே, அங்கு ஒரு பிரச்சினை ஏற்படும் போது அவர்களை அனுமதிக்க மாட்டோம் எனச் சொல்ல முடியாது.

இந்தியாவுக்கு ஏன் முக்கியம்: ஆனால், வங்கதேசத்துடன் இந்தியா மிகப் பெரிய எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த எல்லையில் தான் பல மிக முக்கிய பகுதிகள் இருக்கிறது. ஹசீனா வெளியேறிவிட்ட நிலையில், அங்கே ஜியா அதிகாரத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது. இந்த ஜியா சீன ஆதரவு, பாக். ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். அவர் இந்தியாவுடன் நெருக்கம் காட்ட மாட்டார் என்ற போதிலும் நாம் அவருடன் இணைந்து பணியாற்ற சில வழிகளைக் கண்டறிய வேண்டும். எனவே, ஹசீனா விவகாரத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வங்கதேச விவகாரத்தில் பாகிஸ்தான் சதி இருக்கலாம் எனச் சிலர் சொல்கிறார்கள். சில காலமாகவே சீனா உடன் மோதல் இருப்பதாகவும் கூறப்பட்டது. இன்னொரு பக்கம் ஹசீனா இதன் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம் என்கிறார். ஆனால், என்னைப் பொறுத்தவரை வெளிநாட்டுச் சக்தியால் இவ்வளவு பெரிய மாற்றத்தை எல்லாம் செய்ய முடியாது.

மக்கள் செல்வாக்கு: இதற்கு க்யூபா ஒரு உதாரணம். அரசுக்கு மக்கள் மத்தியில் நற்பெயரும் செல்வாக்கும் இருந்தால் எந்த சக்தி நினைத்தாலும் ஒன்னும் செய்ய முடியாது. ஹசீனா மிகப் பெரிய தவறு செய்துள்ளதாலேயே இது நடந்துள்ளது. பாகிஸ்தானே திவால் ஆகி இருக்கிறது. இந்த நேரத்தில் இதன் பின்னணியில் பாகிஸ்தான் எனச் சொல்வது நியாயமாக இல்லை.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு விவகாரத்தைப் பார்த்தோம் என்றால் அங்கே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டோரின் பேரனுக்கு எல்லாம் இட ஒதுக்கீடு வழங்குகிறார்கள். ஏனென்றால் அங்கே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் பொருளாதார ரீதியான பலன் அக்கட்சியினருக்கே திரும்பத் திரும்பக் கிடைக்கிறது. இதை எதிர்த்தே அங்குப் போராட்டம் தொடங்கியது. மேலும், அங்கிருந்த மதவாதிகள் வெளியே வர ஆரம்பித்துள்ளனர். இப்படி அரசியலே அங்கு மொத்தமாக மாறுகிறது.

சர்வாதிகாரம்: வங்கதேசத்தில் கடந்த சில ஆண்டுகளில் அரசு நடவடிக்கைகளால் கடும் கோபம் இருந்துள்ளது. அவை எல்லாம் சேர்ந்து இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் வெடித்துவிட்டது. 2008இல் ஆட்சிக்கு வந்த அவர், மெல்ல அதிகாரத்தைத் தன்வசம் குவித்து சர்வாதிகாரம் நோக்கி நகர்ந்தார். யாராவது அரசைக் கேள்வி கேட்டாலே அவர்கள் தேச துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர்.

கொரோனாவுக்கு பிறகு அவர்களால் பொருளாதார ரீதியில் பெரியளவில் வளர முடியவில்லை. பொதுவாகவே எப்போதும் பிரச்சினைகள் இருந்தாலும் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தால் அது பெரிதாகப் பாதிக்காது. ஆனால், பொருளாதாரம் தள்ளாட ஆரம்பித்தால் திடீர் பதற்றங்கள் ஏற்படும். வங்கதேசத்தில் இதுதான் நடந்துள்ளது.

பொருளாதார சிக்கல்கள்: இப்போது நம்மை சுற்றி இருக்கும் பல நாடுகளில் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இதை நாம் ஒரு எச்சரிக்கையாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். நாம் இப்போது வலுவாக இருக்கலாம். ஆனால், தற்போது உலகமயமாக்கல் காரணமாக அனைத்து நாடுகளும் ஒன்றுடன் ஒன்று கனெக்ட் ஆகியே இருக்கிறது. எனவே, நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். கடந்தாண்டு வரை சர்வாதிகாரி போல இருந்த ஹசீனா கூட தனக்கு இந்த நிலை ஏற்படும் என்பதைக் கணித்திருக்க மாட்டார்.

ஜியா இருந்த போது இந்திய எல்லையில் பயங்கரவாத செயல்களும் அதிகரித்தன. அதற்கு ஜியா அரசே மறைமுக ஆதரவையும் வழங்கியது. மேலும், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்குச் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அங்கே ஹசீனா கட்சி இல்லாதது பிரச்சினை தான். முன்பு ஜியா அங்குப் பிரதமராக இருந்த போதே சிறுபான்மையினர் பல பிரச்சினைகளை எதிர்கொண்டனர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+