EXCLUSIVE: திராவிட மாடல் என்றால் என்ன? அண்ணாமலை திராவிடரா? மனுஷ்யபுத்திரன் பரபரப்பு பேட்டி!
சென்னை: ஆளும் திமுக அரசு திராவிட மாடல் என்ற பிரயோகத்தை முன்னெடுத்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் சட்டசபை தொடங்கி பல்வேறு மேடைகளில் திராவிட மாடல் என்பதை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். ஒவ்வொரு நலத்திட்டங்களையும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டம் என்று திமுக தெரிவித்து வருகிறது.
Recommended Video
இந்த நிலையில்தான் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஒன்இந்தியா பத்திரிக்கையாளர் உமா மகேஸ்வரனுக்கு வழங்கிய நேர்காணலில் திராவிட மாடல் என்றால் என்ன.. அதன் நோக்கம் என்ன என்று விளக்கி உள்ளார்.
மே 28-ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! எதைப் பற்றி பேசப்போகிறார்கள் தெரியுமா?
திராவிட மாடல்
கேள்வி: திராவிட மாடல் என்றால் என்ன? இவ்வளவு காலம் அரசியல் அரங்கிலேயே இந்த வார்த்தை இல்லையே?
பதில்: குஜராத் மாடலுக்கு நேர் எதிரானது திராவிட மாடல். மோடி மாடல் எப்போது முன்னிறுத்தப்பட்டதோ அதற்கு எதிராக திராவிட மாடல். குஜராத் மாடல் ஒரு 10 வருடமாக இருக்கிறது. ஆனால் திராவிட மாடல் ஒரு 100 வருடமாக இருக்கிறது. 100 வருடத்திற்கு முன்பே இதை சொல்லி இருக்கலாம். அப்போது முதல்வர் ஸ்டாலின் இல்லை. முதல்வர் ஸ்டாலின் வந்துதான் அதற்கு கோட்பாட்டு வடிவம் கொடுத்துள்ளார்.
ஸ்டாலின் திராவிடம்
கேள்வி: கருணாநிதி, அண்ணா செய்யாதது முதல்வர் ஸ்டாலின் செய்துவிட்டாரா?
பதில்: முதல்வர் ஸ்டாலின்.. கருணாநிதி, அண்ணா அவர்களின் நீட்சி. கம்யூனிசம் எப்படி ஒவ்வொரு தலைவர்களின் வருகையின் போது வளர்ச்சி கண்டதோ அப்படித்தான் இதுவும். ஏன் யாருமே குஜராத் மாடல் என்ன என்று கேட்பது இல்லை. குஜராத் மாடல் என்றால் என்ன? திராவிட மாடல் என்றால் சம உரிமை, மாநில சுயாட்சி. மாநில சுயாட்சி என்றால் அதில் மொழி பற்று தொடங்கி எல்லாமே வந்துவிடும்.சமூக நீதிக்குள் பொருளாதார கொள்கை, சாதிக்கு எதிரான கொள்கை எல்லாம் வந்துவிடும். ஏற்கனவே திமுக ஆட்சி காலங்களில் செய்தது எல்லாம் இந்த மாடலுக்குள் வரும். அதிமுகவே இதை விட்டு வெளியேற முடியாது.
தமிழ்நாடு மாடல்
கேள்வி: தாய் தமிழ்நாடு மாடல் - தமிழ் மாடல் என்று சொல்லலாமா?
பதில்: திராவிட மாடல் என்பது பெரியது. அது பெரிய சித்தாந்தம். இதுவரை தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து மாற்றங்களையும் உள்ளடக்கிய சித்தாந்தம். பல மாநிலங்களில் மொழி போராட்டம் நடந்தது. கர்நாடகாவில் கன்னடம் தேவை என்றார்கள். மகாராஷ்டிராவில் அதே போல் போராடினார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மொழியோடு சேர்த்து சமூக நீதி போராட்டம் செய்தனர். அதனால்தான் திராவிட மாடல் வேறு மாதிரியானது.
கஸ்டடி மரணம்
கேள்வி: நல்ல விஷயங்களை மட்டுமே திராவிட மாடல் என்கிறார்களே.. கஸ்டடி மரணம், லஞ்ச புகார் எல்லாம் திராவிட மாடல் இல்லையா?
பதில்: விக்னேஷ் கஸ்டடி மரணம் திராவிட மாடல் இல்லை. . திராவிட மாடல் என்பது சமூக அநீதிக்கு எதிரானது. அதை 100 சதவிகிதம் நாங்கள் அடைந்துவிட்டோம் என்று கூற முடியாது. இரு மொழி கொள்கையை நாங்கள் கொண்டு வந்தோம், ரிசர்வேஷன் இருக்கிறது, நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி உள்ளோம் இதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் என்பது லட்சியம். அதற்கான திட்டங்கள், பாலிசி எங்களிடம் உள்ளது. போலீஸ் ஹிஸ்டரி எடுத்து பார்க்க வேண்டும். அந்த வழக்கை முதல்வர் ஸ்டாலின் கொலை வழக்கு என்றார். தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார்.
போலீஸ் குற்றம்
கேள்வி: போலீசில் நடக்கும் குற்றங்களை தடுக்கலாமே? தடுக்க முடியாதா?
பதில்: அதிமுக ஆட்சியில் இப்படி வேகமாக முடிவெடுக்க மாட்டார்கள். போலீசில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று முதல்வரே கூறியுள்ளார். போலீசார் எல்லோரும் இதை பின்பற்றுகிறார்களா என்று கண்டுபிடிக்க முடியாது? எப்படி எல்லா கிராமத்திலும் இருக்கும் போலீசாரை கண்காணிக்க முடியும்? தொடர்ந்து போலீசில் மாற்றங்களை செய்தால் மட்டுமே மாற்றங்களை செய்ய முடியும். எங்கோ நடக்கும் விஷயங்களை நாங்கள் எப்படி தடுக்க முடியும். வகுப்புகள் எடுத்து வருகிறோம். அறிவுரைகள் வழங்குகிறோம். ஆனால் எல்லா இடங்களிலும் தடுப்பது கடினம்.
நாம் தமிழர் வாக்குறுதி
கேள்வி: நாம் தமிழர் வாக்குறுதி போல.. போலீஸ் உடலில் பாடி கேம் பொருத்தலாமே?
பதில்: ஆனால் அது பிரைவசியை மீறும் விஷயமாக இருக்காதா? உங்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது போல ஆகிவிடாதா? எல்லோரையும், எப்போதையும் மானிட்டர் செய்வதன் மூலம் தடுக்க முடியும் என்று தெரிவிக்க முடியாது. பல அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள். அதற்காக அவர்களிடம் கேமரா கொடுக்க முடியுமா? ஆசிரியர்கள் பாலியல் குற்றம் செய்கிறார்கள் அதனால் அவர்களிடம் கேமரா வைக்க முடியுமா?
அண்ணாமலை திராவிடன்
கேள்வி: அண்ணாமலை தன்னை கருப்பு திராவிடன் என்கிறாரா? அவரும் தன்னை திராவிடன் என்கிறாரா? தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது என்கிறாரே?
பதில்: ஒரு வீட்டில் தீ வைத்தால்.. தீ வைத்தவனும் காப்பாற்றுவது போல் ஓடுவான். அப்படிதான் அண்ணாமலை ஓடுகிறார். அண்ணாமலை திராவிடமும் இல்லை. தமிழரும் இல்லை. திராவிடம் என்பது சித்தாந்தம். அது பிறப்பால் ஏற்படுவது இல்லை. அவர் திராவிடன் என்றால் நீட்டை எதிர்ப்பாரா? அவர் பாலிசி என்ன? எப்படியாவது பிரஸ் மீட் தர வேண்டும் என்று பேசுகிறார்? அவருக்கு என்று ஒரு கொள்கையும் இல்லை.
மனுஷ்யபுத்திரனின் முழு நேர்காணலை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்!