Exclusive திருமாவளவனை ஒருமையில் பேசியது ஏன்? விசிக நிர்வாகியிடம் காயத்ரி சொன்ன தகவலின் பின்னணி என்ன?
திருமாவளவனை அவதூறாக பேசியது ஏன் என்பது குறித்து காயத்ரி ரகுராம் விசிக மூத்த நிர்வாகியிடம் விளக்கம்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் எம்பியுமான திருமாவளவனை ஒருமையில் பேசியது ஏன் என்பது குறித்து நடிகை காயத்ரி ரகுராம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் தன்னை வார் ரூம் மூலம் அவதூறு பரப்புவதாக கூறி அக்கட்சியிலிருந்து விலகியவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் கனத்த இதயத்துடன் விலகுவதாக கூறியிருந்தார். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களுக்கு சேவையாற்ற மாற்றுக் கட்சியில் இணைவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று மாலை திடீரென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சென்னை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்தார். முன்னறிவிப்பின்றி நடந்த இந்த திடீர் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றாலும் காயத்ரி விசிகவில் இணைகிறாரா என்ற கேள்வியை எழுப்பியது.

விடுதலைச் சிறுத்தைகள்
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலனிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பில் பேட்டி எடுத்தோம். அவர் கூறியிருப்பதாவது: பாஜகவில் காயத்ரி ரகுராமுக்கு பிரச்சினை ஏற்பட்டு அவர் விலகினார். அப்போது அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் வேறு கட்சியில் இணைவீர்களா என கேட்ட போது காயத்ரி விசிகவில் அழைப்பு வந்தாலும் இணைவேன்.

திமுக அழைத்தாலும் இணைவேன்
திமுகவில் அழைத்தாலும் இணைவேன் என தெரிவித்திருந்தார். இதில் முதலில் எங்கள் கட்சியின் பெயரைத்தான் அவர் கூறியிருந்தார். இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கட்சித் தலைவர் திருமாவளவனை ஒருமையில் பேசியதோடு மிகவும் கடுமையான சொற்களால் விமர்சித்திருந்தார். எனவே பலர் விசிக பெயரை காயத்ரி சொன்னதும் அதிர்ச்சியாகினர்.

காயத்ரியிடம் பேசினேன்
இதையடுத்து நான் காயத்ரியை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவரிடம் பாஜகவில் என்ன பிரச்சினை, என்ன நடந்தது என கேட்டறிந்தேன். பிறகு எங்கள் கட்சியின் பெயரை கூறியதற்கு அவருக்கு நன்றி தெரிவித்ததுடன் , அவரது தேர்வு சரியானது என்றும் கூறியிருந்தேன். மேலும் எங்கள் கட்சித் தலைவரை ஒருமையிலும் கடும் சொற்களாலும் விமர்சித்திருந்தீர்கள், இப்போது எப்படி எங்கள் கட்சியின் பெயரை கூறினீர்கள். எந்த சூழல் உங்களை மாற்றியது என கேட்டேன்.

திருமாவளவனை மோசமாக விமர்சித்த காயத்ரி
அதற்கு அவர் அண்ணன் திருமாவளவனை நான் மிகவும் மோசமாக விமர்சித்ததற்கு ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டேன். தற்போது மீண்டும் ஒரு முறை மனதார மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். பாஜகவில் நான் இருந்த போது என்னிடம் அவரை பற்றி தவறாக கூறியிருந்தார்கள். இப்படியெல்லாம் பேசுமாறு சொல்லி கொடுத்தார்கள். அதனால்தான் நான் அப்படி பேசினேன். ஆனால் வெளியே வந்த பிறகுதான் அண்ணன் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொண்டேன்.

பெண்களுக்கு பாதுகாப்பு
பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை, பெண்கள் சற்று வளர்ந்தால் கூட நசுக்கப்படுகிறார்கள். ஆனால் விசிகவில் பெண் விடுதலை என்ற ஒரு கொள்கை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதனால் அண்ணன் பெண்கள் மீது வைத்திருக்கும் மரியாதை தெரிந்தது. எனவே அவரை நான் சந்திக்க வேண்டும் , அதற்கு நேரம் வாங்கி கொடுங்கள் என என்னிடம் காயத்ரி கேட்டுக் கொண்டார்.

3 மாதங்களாக முயற்சி
தலைவருடன் காயத்ரி ரகுராமை சந்திக்க வைக்க 3 மாதங்களாக முயற்சித்து வந்தேன். ஆனால் தலைவர் திருமாவளவன் அடிக்கடி கட்சி பணிகளுக்காக வெளியூர் செல்ல நேரிட்டிருந்தது. ஆனால் நேற்றைய தினம் திருமாவளவன் சென்னையில் இருந்தார். அப்போது அவரிடம் காயத்ரி ரகுராம் மரியாதை நிமித்தமாக சந்திக்க விரும்புகிறார் என சொன்னேன். வர சொல்லுங்கள் என்றார். விசிகவின் தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர் திருமாவளவனை சந்தித்து பேசினார். அப்போது ஏப்ரல் 14 இல் தொடங்கவிருக்கும் தனது நடைபயணத்தை பற்றி விளக்கிப் பேசினார். சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி கொடுத்ததற்கு திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்தார். இதையடுத்து என்னிடம் (பாவலன்) பேசிய காயத்ரி, திருமாவளவன் பழகுவதற்கு எத்தனை இனிமையானவர், பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில் சிறந்தவர், பெண் விடுதலைக்காக எப்படியெல்லாம் அவர் பாடுபடுகிறார் என்பதை அறிந்து கொண்டேன் என காயத்ரி தெரிவித்ததாக பாவலன் தெரிவித்தார்.

காயத்ரி விசிகவில் இணைகிறாரா
காயத்ரி விசிகவில் இணைகிறாரா என பாவலனிடம் கேட்ட போது, இந்த கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். அவர் இணைய விரும்பினால் அவரை இணைப்பது குறித்து எங்கள் கட்சியின் உயர்மட்டம் குழு முடிவு செய்யும். மேலும் எங்கள் கொள்கை ஜனநாயகம், அவர் இருந்த கட்சியின் கொள்கை சனாதனம். எனவே எங்கள் கொள்கையை அவர் ஏற்றுக் கொள்ள விரும்பினால் உயர்மட்ட குழு அவரை கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யும். நடைப்பயணத்தை தாண்டி திருமாவளவனுடன் காயத்ரி அரசியல் தொடர்பாக எதையும் பேசவில்லை என்றார் பாவலன்.












Click it and Unblock the Notifications