சி ஏ ஏ விவகாரம்... வீதிக்கே வராமல்... வீடு தேடி வரவைத்த ரஜினி
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து பேசிய விவகாரம் சி ஏ ஏ எதிர்ப்பு போராட்ட குழுவினரை அதிருப்தி கொள்ள வைத்துள்ளது.
Recommended Video

கடந்த 15 நாட்களுக்கு மேலாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில், ரஜினிகாந்திற்கு இப்போது தான் சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டம் பற்றி தெரிந்ததோ என அந்த குழு கேள்வி எழுப்புகிறது.
மேலும், டெல்லி கலவரம் தொடர்பாக ரஜினி கூறிய கருத்தை வரவேற்பதாகவும், ஆனால் அதே சமயம் வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவம் பற்றி ரஜினி வாய் திறக்காதது மிகுந்த ஏமாற்றம் தருவதாகவும் கூறுகிறார் போராட்டத்தில் பங்கேற்று வரும் சாதிக்.

தொடர் போராட்டம்
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையாக போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும், 15 நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே ஆங்காங்கு நடைபெற்று வந்தது. ஆனால் இன்று ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் தமிழகத்தில் போராட்டக்களம் நாளுக்கு நாள் அதிகரித்து வலுவடைந்துள்ளது. இதற்கு காரணம் கடந்த 14-ம் தேதி இரவு வண்ணாரப்பேட்டையில் சி ஏ ஏ எதிர்ப்பு பேரணி நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி தான். அதன் விளைவாக இன்று சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டணம், உள்ளிட்ட பல இடங்களில் இரவு பகல் பாராமல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரசு திகைப்பு
சி ஏ ஏ-வுக்கு எதிராக தமிழகத்தில் இவ்வளவு தூரம் போராட்டங்கள் வலுவடையும் என தமிழக அரசு சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு தடியடி சம்பவத்தால் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் பரவி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே வண்ணாரப்பேட்டை போராட்டம் மற்றும் தடியடி சம்பவம் தொடர்பாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் டிரம்ப் இந்தியா வருவதற்கு முன்பு குறிப்பு அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அது பற்றி டிரம்ப் தரப்பில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டத்தை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொது நபர்
இதனிடையே குடியுரிமை சட்டம் விவகாரத்தில் ரஜினிகாந்த் கூறிய கருத்து அவரை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. தன் மீது காவி சாயம் பூசப்படுவதாக உணர்ந்த ரஜினிகாந்த், இஸ்லாமிய பிரதிநிதிகளை அழைத்து பேசி தாம் ஒரு பொதுவான நபர் என்பதை வெளிக்காட்டிக்கொள்ள நினைத்தார். இதற்காக அவரது மக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ் மூலம் சில முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இதையடுத்து தனது வெறித்தனமான ரசிகர் அம்பரீஷின் மாமனாரும், தனது நண்பருமான ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கரை நேற்று சந்தித்து ரஜினி வருத்தப்பட்டுள்ளார்.

மத குருமார்கள்
ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகளிடம் பேசி அவர்களை வந்து உங்களை சந்திக்க முயற்சி செய்வதாக அபுபக்கர் நேற்று உறுதியளித்த நிலையில் இன்று அந்த சந்திப்பு நடைபெற்றது. இஸ்லாமிய மதகுருமார்கள் (ஆலிம்கள்) அனைவருக்கும் பச்சை நிற பட்டு சால்வை அணிவித்து வரவேற்ற ரஜினி, இஸ்லாமியர்களுக்கு என்றும் தாம் உறுதுணையாக இருப்பேன் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் உருகியுள்ளார். மேலும், உங்களின் அச்சத்தை நீக்க தாம் நடவடிக்கை எடுப்பதாக ரஜினி உறுதிகொடுத்தார். தனக்கு பின்னால் பாஜக இல்லை என்றும், தான் தனி மனித சுதந்திரத்துடன் செயல்பட்டு வருவதாகவும் ரஜினி அவர்களிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

அதிருப்தி
ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய விவகாரம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகளில் ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். வீதிக்கு வராமல், வண்ணாரப்பேட்டை தடியடிக்கு கண்டனம் தெரிவிக்காமல், ரஜினி தான் நினைத்ததை சாதித்துவிட்டார் என சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டக் குழுவில் உள்ள சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். மற்றொரு தரப்பினரோ ரஜினி சி ஏ ஏ பாதிப்பு அச்சத்தை நீக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருப்பது வரவேற்க வேண்டிய விவகாரம் என்றும் நிச்சயம் பேச வேண்டிய இடத்தில் பேசி ரஜினி சி ஏ ஏ-விவகாரத்தில் மாற்றத்தை கொண்டு வருவார் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications