முதல்வர் அறிவுறுத்தல்.. பெண் காவலர்களுக்கு சாலை பாதுகாப்பிலிருந்து விலக்கு.. டிஜிபி சுற்றறிக்கை
சென்னை: சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபட வேண்டாம் என தமிழ்நாடு காவல் துறை டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பெண் காவலர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு சில பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
அதிலும் கர்ப்பிணி காவலர்களுக்கும் 50 வயது மேல் உள்ள காவலர்களுக்கும் அதிக பணிச்சுமை உள்ள இடங்களில் நேரடியாக பணியாற்ற இடங்களை ஒதுக்க வேண்டாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பெண் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் துறை உயரதிகாரிகளிடம் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல்வர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கவும், சாலைகளில் பெண் காவலர்களை நீண்ட நேரம் நிற்க வைக்க வேண்டாம் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி. திரிபாதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக மண்டல ஐஜி, ஆணையர்கள், அதிகாரிகளுக்கு திரிபாதி கடிதத்தை அனுப்பியுள்ளார்.