சென்னையில் 20 ஆயிரம் குடியிருப்புகளை இடிக்க வேண்டும்! அரசுக்கு வல்லுநர் குழு அதிரடி பரிந்துரை!
சென்னை: சென்னையில் சேதமடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழ வாய்ப்புள்ள 20 ஆயிரத்து 453 வீடுகளை உடனடியாக இடிக்க வேண்டும் என வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.
கடந்த மாதம் சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் அடங்கிய குழு ஆய்வுக்காக அமைக்கப்பட்டது.
இதனிடையே அந்தக் குழு அளித்துள்ள ஆய்வறிக்கையின் படி சென்னையில் 20 ஆயிரம் குடியிருப்புகள் சிதலமடைந்த நிலையில் இடிந்து விழக் கூடிய அபாயத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

குடிசை மாற்று வாரியம்'
கடந்த டிசம்பர் மாதம் சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதிலிருந்த 24 வீடுகள் தரைமட்டமாகின. கட்டிடத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக முன்கூட்டியே அதில் வசித்து வந்த மக்கள் வேறு இடங்களுக்கு சென்றதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ஒரு வேளை அந்தக் குடியிருப்பில் மக்கள் வசித்திருந்தால் கற்பனைக்கு கூட எட்டாத வகையில் பாதிப்புகள் இருந்திருக்கும்.

ஆய்வுக்கு குழு
இதனிடையே இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் மற்ற பிளாக்குளில் கட்டிடத்தின் வலிமையை ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம் என தமிழ்நாடு நகர்ப்புற வசிப்பிட மேம்பாடு வாரியம் முடிவெடுத்தது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் அடங்கிய தொழிநுட்ப மதிப்பீட்டு குழுவை தமிழ்நாடு நகர்ப்புற வசிப்பிட மேம்பாடு வாரியம் அமைத்தது. அதில் மண்ணியல், கட்டிடவியல் வல்லுநர்கள் என பலரும் இடம்பெற்றனர்.

மணல் ஆய்வு
இந்நிலையில் மணல் மற்றும் காங்கிரீட் தரம் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்ட அந்தக் குழுவினர், இறுதியாக அரசிடம் அளித்த அறிக்கையில் சென்னையில் சேதமடைந்த நிலையில் இருக்கக் கூடிய 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இடிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு மாற்றாக தமிழ்நாடு நகர்ப்புற வசிப்பிட மேம்பாடு வாரியம் புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாநகராட்சி நடவடிக்கை
ஏற்கனவே சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகளான திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை என பல இடங்களிலும் சேதமடைந்த கட்டிடங்களை இடிக்குமாறு கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications