சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம், எப்படி நிறைவேற்றப்படும்?
சென்னை: சபாநாயகருக்கு எதிராக எப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து செயல்படுத்தப்படும் என்பது தொடர்பாக பொதுவாக சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கும்.
ஏனெனில், மத்திய அல்லது, மாநில அரசுகளுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை போல, சபாநாயகருக்கு எதிராக அவ்வப்போது எங்கும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது கிடையாது.

சட்டசபை விதி 179-ன் உட்பிரிவு சி அடிப்படையில், சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும். இதுதொடர்பாக, 14 நாட்கள் முன்பாக, சட்டசபை செயலாளரிடம் மனு அளிக்க வேண்டும்.
சட்டசபை கூடிய பிறகு, நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆய்வு செய்யப்படும்போது, சபாநாயகராக வேறு ஒருவர் நியமிக்கப்படுவார். தீர்மானத்தை படித்துக் காட்டும் அவர், இதற்கு ஒப்புதல் அளிக்கும் உறுப்பினர்கள் எத்தனை பேர் என எண்ணிக்கை அடிப்படையில், சோதித்து பார்ப்பார்.
இதற்காக எம்எல்ஏக்களை அவரவர் இடங்களில் எழுந்து நிற்க கேட்டுக் கொள்ளப்படுவார்கள். குறைந்தபட்சம் 35 உறுப்பினர்களாவது ஆதரவு அளித்தால், சட்டசபையின் அனுமதி கிடைத்துவிட்டதாக அர்த்தமாகும்.
இதையடுத்து, தனித் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த உத்தரவிடப்படும். உடனடியாக விவாதம் நடத்தலாம் அல்லது, சட்டசபை, அனுமதி கிடைத்த நாளிலிலிருந்து 7 நாட்களுக்குள்ளாக விவாதம் நடைபெற வேண்டும்.
விவாதத்திற்கு பிறகு, தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். சபாநாயகருக்கு பதில் துணை சபாநாயகர், அன்றைய தினம் அவையை நடத்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவார். இந்த தீர்மானத்திற்கு, பெரும்பான்மை பலம் கிடைத்தால், சபாநாயகர் பதவியை இழக்க வேண்டி வரும்.












Click it and Unblock the Notifications