சென்னையில் இறுதி ஊர்வலத்தில் வெடித்த நாட்டுவெடி.. பார்வையை இழந்த மாணவன்.. 3 பேர் கைது
சென்னை: இறுதி ஊர்வலத்தில் நாட்டு வெடி வெடித்ததில் நெருப்பு பட்டு மாணவனின் இடது கண் பார்வை பறிபோனதால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்த சோக சம்பவம் சென்னை ஜாபகர்கான் பேட்டையில் இறுதி ஊர்வலம் நடைபெற்றபோது நடந்துள்ளது,

9ம் வகுப்பு மாணவன்
அழகு சுந்தரம் என்பவர் புதுக்கோட்டையில் கூலி வேலை செய்து வரும் நிலையில் அவரது மனைவி ராதா மற்றும் பிள்ளைகள் புவனேஷ்வரி, சந்தோஷ் ஆகியோர் சென்னை ஜாபகர்கான் பேட்டையில் வசித்து வருகின்றனர். சந்தோஷ் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் நவம்பர் 14ம் தேதி அன்று ஜாபர்கான்பேட்டை ஜான்கென்னடி தெருவை சேர்ந்த விமலா என்பவரின் இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

இறுதி ஊர்வலத்தின்போது வெடி
அப்போது சாலையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அதேசமயம் நாட்டு வெடிகளையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இறுதி ஊர்வலத்தின்போது சிறுவன் சந்தோஷ் அந்த வழியே கடைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசின் நெருப்பு அவரது இடது கண்மீது விழவே அய்யோ அம்மா என அலறித் துடித்துள்ளார். வலிதாங்காமல் கத்தி உள்ளார்.

சிறுவனின் பார்வை பறிபோனது
இதனால் அதிர்ச்சி அடைந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற சிலர் உடனடியாக சிறுவனை மீட்டு எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சந்தோஷின் இடது கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் நெருப்பு மற்றும் கல் பட்டதால் அவர் கண் பார்வையை இழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீசில் புகார்
இதை அடுத்து சந்தோஷின் சகோதரி புவனேஷ்வரி தன்னுடைய சகோதரன் கண் பார்வை பறிபோனதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையில் இறுதி ஊர்வலத்தின்போது சண்முகவேல் என்பவர் நாட்டு வெடி வெடித்ததும், அந்த வெடியினால்தான் சிறுவனின் பார்வை பறிபோனதும் தெரியவந்தது.

3 பேர் கைது
இதை அடுத்து நாட்டு வெடி வாங்கிய குணசேகரன், பட்டாசு வெடித்த சண்முகவேல், சட்டவிரோதமாக நாட்டு வெடி விற்ற செல்வகுமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வெடிபொருளை அஜாக்கிரதையாக கையாளுதல், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படுதல், மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவர்களை எம்ஜிஆர் நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சகோதரி கண்ணீர்
இதுகுறித்து சந்தோஷின் சகோதரி புவனேஸ்வரி கூறுகையில் இறுதி ஊர்வலத்தில் அஜாக்கிரதையாக பட்டாசு வெடித்ததால்தான் தன்னுடைய சகோதரனின் பார்வை பறிபோனதாகவும், தம்பிக்கு விரைவில் பார்வை கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications