கோர தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல்.. விழுப்புரம் + 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு
சென்னை: ஃபெஞ்சல் புயல் மற்றும் அதனை ஒட்டி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.
ஃபெஞ்சல் புயல் ஆடிய பேயாட்டத்தால் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்களாக இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த பிறகும் பலத்த மழை பெய்தது.

இதனால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் தீவுபோல் காட்சியளிக்கிறது. அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மரக்காணத்திலும், 5 மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் இவர்களுடன் காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் இணைந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை- திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 2 அடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணி நேற்று தொடங்கிய நிலையில் இடையிடையே மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால் இன்றும் 2-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தன.
ஆனால் இன்றும் விழுப்புரத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்னாமலை ஆகிய 6 மாவட்டங்களுக்குதான் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், 4 மாவட்டங்களில் அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்துவதற்கு வரும் 10 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்து இருந்தது.












Click it and Unblock the Notifications