சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு - டிச.15க்கு மேல் 2% வட்டி
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரியினை இதுநாள்வரை செலுத்தாதவர்கள், வட்டி இல்லாமல் செலுத்த டிசம்பர் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு செலுத்தப்படும் சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25% முதல் 150% வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. 601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டது.
உயர்ஜாதி ஏழை இடஒதுக்கீட்டால் பெரும் சிக்கல்! வருமான வரி சட்டத்துக்கு தடை கோரி திமுக பிரமுகர் வழக்கு!
சொத்து வரி உயர்வு
இந்த நிலையில் சொத்து வரி செலுத்துவது குறித்த அறிவிப்பு ஒன்றினை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரி சீராய்வின்படி, சொத்து உரிமையாளர்களால் 1.10.22 முதல் செலுத்தப்பட்டு வருகிறது.
டிசம்பர் 15 வரை கால அவகாசம்
சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியினை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு 15.11.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியினை 5 லட்சத்து 92 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் செலுத்தி உள்ளனர்.
வட்டி இல்லாமல் செலுத்தலாம்
இந்நிலையில், சொத்து உரிமையாளர்களின் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியினை இதுநாள்வரை செலுத்தாதவர்கள், வட்டி இல்லாமல் செலுத்த டிசம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2 சதவிகித வட்டி
இதுவரை சொத்து வரியை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி டிசம்பர் 15ஆம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தி 2 சதவீத தனி வட்டியினை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.