இரட்டை இலை சின்னத்துக்கு ரூ50 கோடி லஞ்சம்: சுகேஷ் வீட்டில் திடீர் ரெய்டு- 20 சொகுசு கார்கள் பறிமுதல்
சென்னை: இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத்தர ரூ50 கோடி லஞ்சம் பெற்றது உள்ளிட்ட ரூ200 கோடி மோசடி வழக்குகளில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகரின் சென்னை கானாத்தூர் வீட்டில் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் 20 சொகுசு கார்கள், லேப்டாப் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக கட்சி பிளவுபட்ட நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது இரண்டு அணிகளுமே இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடின.
இது தொடர்பான மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம் இரண்டு அணிகளுமே அதிமுக கட்சி பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த தடை விதித்தது. இதனால் சசிகலா அணி, அதிமுக அம்மா அணியாகவும் ஓபிஎஸ் அணியானது புரட்சித் தலைவி அம்மா அணியாகவும் தேர்தலை எதிர்கொண்டன. அந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகாரால் தேர்தலே ரத்து செய்யப்பட்டது.

டெல்லியில் சிக்கிய சுகேஷ்
இதனிடையே டெல்லியில் தினகரன் தரப்பிடம் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் பெற்றுத்தருகிறோம்; அதற்காக ரூ50 கோடி லஞ்சம் தர வேண்டும் என கூறி தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்ற சுகேஷ் சந்திரா என்ற சதீஷ் சந்திரா பணம் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து சுகேஷ் சந்திராவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அப்போது ரூ1.3 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திகார் சிறையில் தினகரன்
மேலும் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீதும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தினகரனோ, சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே எனக்கு தெரியாது; அவரிடம் நான் பேசியதும் கிடையாது என திட்டவட்டமாக மறுத்தார். மேலும் இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் விசாரணைக்கு ஆஜரானார் தினகரன். அவரிடம் 4 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் டெல்லி போலீசாரால் தினகரனும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் தினகரன் ஜாமீனில் விடுதலையானார்.

அமலாக்கத்துறை ரெய்டு
இந்த வழக்கு இன்னமும் விசாரணையில் இருக்கிறது. சுகேஷ் சந்திரா மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வங்கிகளில் கடன்பெற்று மோசடி என்பது உள்ளிட்ட ரூ200 கோடிக்கான மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுகேஷ் சந்திரா தற்போதும் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார். ஆனால் திகார் சிறையில் இருந்தபேடி பணம் பறிப்பு, ஆட்கடத்தல் என பல குற்றசெயல்களில் சுகேஷ் சந்திரா ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த நிலையில்தான் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையை அடுத்த கானாத்தூரில் உள்ள சுகேஷ் சந்திராவின் சொகுசு பங்களாவில் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தினர்.

20 சொகுசு கார்கள் பறிமுதல்
இந்த சோதனையின் முடிவில் பங்களாவில் பதுக்கி வைத்திருந்த 20 சொகுசு கார்கள், லேப்டாப் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சுகேஷ் சந்திராவின் காதலியான நடிகை லீனா மரியா பவுல் மீதும் இதேபோல் ஏராளமான மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன வழக்கில் திடீர் ரெய்டு?
டெல்லி சிறையில் உள்ள சுகாஷ் சந்திரா உள்ளே இருந்தே தமது மோசடிகளை அரங்கேற்றி வருகிறார். ரெலிகேர் என்டர்பிரைசஸ் உரிமையாளரான சிவீந்தர்சிங் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் டெல்லி சிறையில் இருந்தபடியே ஐபோனில் சிவீந்தர்சிங் மனைவி அதிதி சிங்கை தொடர்பு கொண்டு பேசிய சுகாஷ், சட்ட அமைச்சக அதிகாரி பேசுகிறேன்; உங்க கணவரை ஜாமீனில் எடுத்துவிடலாம்; அதுக்கு பணம் செல்வாகும் என கேட்டிருக்கிறார். அதிதி சிங்கும் சுகாஷிடம் பணம் கொடுப்பதாக கூறியதுடன் டெல்லி போலீசுக்கும் தகவல் தெரிவித்துவிட்டார். அதிதியிடம் பணம் பெற சுகேஷ் கூட்டாளிகள் 2 பேரை அலேக்காக தூக்கியது போலீஸ். பின்னர் டெல்லி சிறையில் உள்ள சுகாஷிடம் இருந்து ஐபோனை பறிமுதல் செய்து அவர் மீது கடந்த 7-ந் தேதி வழக்கு பதிவு செய்தது. சுகாஷுக்கு கூட்டாளிகளாக சிறை அதிகாரிகள், தரம்சிங் மீனா சுபாஷ் பத்ரா செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில்தான் சென்னை கானாத்தூரில் உள்ள சுகேஷ் சந்திரா பங்களாவில் இன்று சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரு பால்ட்வின் ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த சுகாஷ் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.












Click it and Unblock the Notifications