‛‛திடீர் பேஸ்புக் மெசேஜ்’’.. சென்னை கூடுதல் ஆணையர் சுதாகர் பெயரில் மோசடி.. மக்களே கவனம்
சென்னை: தமிழக மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் காவல் ஆணையருமான சுதாகர் பெயரில் பேஸ்புக்கில் நூதன மோசடி முயற்சி அரங்கேறி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தற்போது நாம் அனைவரும் பல்வேறு சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகிறோம். இதன்மூலம் நமக்கு தெரிந்தவர்களுடன் நட்பு வட்டாரத்தில் நாம் இருந்தாலும் கூட சமீபகாலமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

அதாவது நமது நண்பர்கள் பெயரில் போலியான சமூக வலைதள பக்கங்கள் தொடங்கி அவசர தேவை உள்ளதாக கூறி பணம் கேட்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனால் நாம் அனைவரும் விழிப்புடன் சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும்.
ஏனென்றால் இப்போது தமிழக மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் காவல் ஆணையருமான சுதாகர் பெயரில் புதிய மோசடி அரங்கேறி உள்ளது. அதாவது ஐபிஎஸ் அதிகாரி சுதாகர் போட்டோவை பயன்படுத்தி ஒரு கும்பல் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி உள்ளது.
அந்த பேஸ்புக் கணக்கில் இருந்து மற்றவர்களுடன் நண்பர்களாகி உள்ளனர். அதன்பிறகு, ‛‛தனது நண்பர் சிஆர்பிஎஃப் பிரிவில் பணிபுரிகிறார். தற்போது அவர் பணியிடமாறுதல் அடைகிறார். இதனால் அவரது வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை கம்மியான விலைக்கு விற்கிறார். தேவை இருப்பின் வாங்கி கொள்ளலாம். இந்த பொருட்கள் வாங்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்'' என செல்போன் எண்ணையும் அனுப்பி உள்ளது.
இதையடுத்து சிலர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது சில பொருட்களை வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அனுப்பி வைத்துள்ளனர். இதனை வாங்க சிலர் முயன்ற நிலையில் முதலில் பணத்தை அனுப்ப வேண்டும் என வலுக்கட்டாயமாக கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் வலுத்தது. இந்நிலையில் தான் ஐபிஎஸ் அதிகாரி சுதாகரிடம் சிலர் நேரடியாக கேட்டுள்ளனர்.
அப்போது தான் அது சுதாகரின் போலியான பேஸ்புக் பக்கம் என்பதும், மர்மநபர்கள் அவரது பெயரில் போலியாக கணக்கு தொடங்கி மோசடிக்கு முயன்றது தெரியவந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் போலியான பேஸ்புக் மோசடி பற்றி ஐபிஎஸ் அதிகாரி சுதாகர் தனது உண்மையான பேஸ்புக் பக்கத்தில் அதுபற்றி தெரிவித்துள்ளார்.
போலியான பேஸ்புக் பக்கத்தை குறிப்பிட்டுள்ள அவர், ‛‛இது ஒரு போலி ஐ.டி. நான் அரிதாகவே நண்பருக்கு கோரிக்கை அனுப்புவேன். யாரிடமும் பணம் கேட்கத்தேவையில்லை. எனவே, தயவுசெய்து இந்த சுயவிவரத்தை ஏற்க வேண்டாம் மற்றும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்' என அறிவுறுத்தி உள்ளார். இதுபோல் பல மோசடிகளை மர்மநபர்கள் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications