பேஸ்புக் திடீர் டவுன்.. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவையும் அப்பப்போ "கட்.." என்ன காரணம்
சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஃபேஸ்புக் பயனாளர்கள் சிலருக்கு அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சில தொழில்நுட்ப கட்டமைப்பு மாற்றியமைப்பு பணிகள் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பேஸ்புக்கில் 154,100 க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதே போல நேற்று இன்ஸ்டாகிராமில் 80,200 மற்றும் வாட்ஸ்அப்பில் 1,300 பாதிப்பு பதிவாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் டவுன் ஆனதும், அதுகுறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் நேற்று டிரெண்ட்டானதை கவனிக்க முடிந்தது. பலரும் அதுகுறித்து புகார் பதிவு செய்தனர்.
இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் இதுகுறித்து கூறுகையில், "சிலருக்கு இப்போது சிக்கல்கள் இருப்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதைச் சரி செய்து கொண்டிருக்கிறோம், விரைவில் எல்லாம் சீராக இயங்கும் என்று நம்புகிறோம்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பேஸ்புக்கின் சேவைகள் ஒரு மாதத்திற்குள் பிரச்சினையை சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். மார்ச் 20ம் தேதி, அன்று, இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள பயனர்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் முழுவதும் செயலிழப்பு பிரச்சினையை எதிர்கொண்டனர். பல பயனர்கள் வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை.
தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இந்த பிரச்சினை எழுந்ததாக பேஸ்புக் கூறியிருந்தது.