பைபிள், ஏசு சிலை.. "இந்தியாவின் நலம் விரும்பியா சோனியா".. திடீரென இணையத்தில் பரவும் தகவலால் பரபரப்பு
சோனியா காந்தி குறித்த போலி தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: சோனியா காந்தி இப்படிப்பட்டவரா? இவங்கதான் இந்தியாவின் நலம் விரும்பியா? என்ற கேள்விகளுடன் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு போட்டோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொரோனாவைரஸ், 2 வருடமாகவே உலகை ஆட்டி படைத்து வருகிறது.. மருந்து எதுவுமே கண்டுபிடிக்க முடியாத சூழலில், தடுப்பூசிகள் மட்டும் நமக்கு கை கொடுத்து உதவி வருகின்றன..
அதேசமயம், தொற்று பாதிப்பையும், அதனால், ஏற்படும் உயிரிழப்புகளையும் கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பெரும் முயற்சிகளில் இறங்கி வருகின்றன.
வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை தொற்று.. பிரதமர் மோடிக்கு, சோனியா காந்தி அவசர கடிதம்!
பரவல்கலக்கம்
இதனிடையே, இந்த கொரோனாவைரஸ் பரவலையும், அதனால் மக்களிடம் ஏற்பட்டுள்ள பீதி, கலக்கத்தையும் பயன்படுத்தி, பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். தொற்று பற்றி மட்டுமல்லாமல், சில அரசியல் தலைவர்களை பற்றியும் செய்திகள் இணையத்தில் அவ்வப்போது வருகின்றன.
பைபிள்
அந்த வகையில், தற்போது மூத்த தலைவர் சோனியா காந்தியின் போட்டோவை பதிவிட்டும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.. அதில், சோனியா காந்தியின் பின்புறம் ஒரு அலமாரி உள்ளது.. அதில், "How to Convert India into Christian Nation" அதாவது இந்தியாவை எப்படி கிறிஸ்துவ நாடாக மாற்றுவது என்ற புத்தகம் இருக்கிறது.. அத்துடன், பக்கத்திலேயே பைபிள், ஒரு ஏசுகிறிஸ்துவின் சிலையும் அந்த போட்டோவில் உள்ளது.
நலம் விரும்பியா?
அதுமட்டுமல்ல, இந்த போட்டோவை நல்லா பாருங்க.. இவர் தான் இந்தியாவின் நலம் விரும்பியா? என்ற கேள்வியும் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டோதான் இணையத்தில் படுவைரலானது.. இதை பார்த்த பலரும் உடனுக்குடன் ஷேர் செய்ய ஆரம்பித்தனர்.. ஃபேஸ்புக்கிலும் பகிரப்பட்டு வருகிறது.. ஆனால், இந்த போட்டோவை ஆய்வு செய்ததில், இது மார்பிங் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது..
மார்பிங் போட்டோ
சோனியா போட்டோ மட்டுமே உண்மை.. அதற்கு பின்னால் இருக்கும், அந்த புத்தகத்தின் பெயர், பைபிள், ஏசு சிலை இவை எல்லாமே மார்பிங் செய்துள்ளனர்.. சோனியாவின் இதே போட்டோவை பிடிஐ, அதாவது பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா, சில நாட்களுக்கு முன்பு, தன்னுடைய செய்தியில் பயன்படுத்தி இருக்கிறது...
விஷமிகள்
அதில்தான் சோனியா காந்திக்கு பின்னாடி அந்த அலமாரியில் இந்த புத்தகத்தின் உண்மையான பெயர் இடம்பெற்றிருக்கிறது.. மற்றபடி, பைபிளும், ஏசு சிலையும் அதில் காணப்படவில்லை. இந்த கொள்ளை நோயில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல், ஆளாளுக்கு விழித்து கொண்டிருந்தால், இப்படிப்பட்ட சூழலிலும், மத ரீதியான விஷயத்தை கிண்டி கிளறும் விஷமிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை..!