ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி பறிபோகுமா? சபாநாயகர் அப்பாவு சொன்னது என்ன தெரியுமா?
சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் விருப்பு, வெறுப்பின்றி நியாயமான முடிவை எடுப்பேன் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கடந்த 3 மாதத்திற்கும் மேலாக அதிமுக விவகாரம் தொடர்ந்து பரபரப்பாகவே இருக்கிறது. கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சபாநாயகர் அப்பாவுக்கு மனு கொடுக்கப்பட்டது. அதேபோல் ஓபிஎஸ் தரப்பிலும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சபாநாயகர் அப்பாவு இதுவரை முடிவு எடுக்காமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அ.தி.மு.க ஒன்றாக இருக்க வேண்டும் என அப்பாவு அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சபாநாயகரின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து ஜெயக்குமார் கூறுகையில், சபாநாயகர் அப்பாவு அவருடைய வேலையை ஒழுங்காக பார்க்கட்டும். கட்டப் பஞ்சாயத்து ராஜா போன்ற வேலைகளைப் பார்க்க வேண்டாம். இவர் கட்சி வேலையைப் பார்க்கிறாரா? இல்லை சபாநாயகர் வேலையைப் பார்க்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். அந்த மனுவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் மாண்புமிகு சபாநாயகர் என அழைக்கப்படுவார். இல்லை என்றால் மாண்பில்லா சபாநாயகர் என்றுதான் அழைக்கப்படுவார் என்று விமர்சித்தார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் விருப்பு, வெறுப்பின்றி நியாயமான முடிவை எடுப்பேன். ஓபிஎஸ், இபிஎஸ்-ன் கடிதங்களை ஆராய்ந்து யாருக்கும் காத்திருக்காமல் முடிவு எடுப்பேன் என்று பதிலளித்துள்ளார்.
அடுத்து என்ன செய்யலாம்?.. கிரீன்வேஸ் சாலையில் குவிந்த ஆதரவாளர்கள்.. ஓபிஎஸ் இபிஎஸ் தனித்தனியே ஆலோசனை