தங்கம் வாங்கும் போது இப்படியுமா மோசடி நடக்குது.. ஹால்மார்க் முத்திரையை கவனிச்சீங்களா.. பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் போலி 'ஹால்மார்க்' முத்திரையுடன் நகைகள் விற்பனை செய்வது நடக்கிறது. போலி ஹால்மார்க் முத்திரையுடன் கடந்த 2 வருடங்களில் 21 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் நகைக்கடைகளில் நகைகள் வாங்குவோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
22 கேரட் தங்கம் விலை 72000 ரூபாய் என்கிற அளவில் விற்பனையாகிறது. ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரம் எல்லாம் சேர்த்து 80 ஆயிரம் வரை என்கிற அளவிற்கு உள்ளது. தங்கம் விலை சற்று இறங்கினாலும் மக்கள் ஓடி போய் தங்கம் வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் விலை கடந்த 10 ஆண்டுகளில் ஒப்பிட்டால் பல மடங்கு உயர்ந்து விட்டது. வெறும் நான்கு வருடங்களில் தங்கம் விலை டபுளாக மாறி உள்ளது. தங்கம் விலை எந்த அளவிற்கு வேகமாக உயருகிறதோ, அதே அளவு வேகத்தில் நகை அடகு விஷயத்தில் கட்டுப்பாடும் ஏறி வருகிறது. இது ஒருபுறம் எனில், தங்க நகைகளை ஹால்மார்க் முத்திரை இல்லாமல் விற்கக்கூடாது என்பதில் மோசடிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

தற்போது நகைக்கடைகளில் வாங்கக் கூடிய தங்கம் தரமானதாக இருக்கவேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக இந்திய தர நிர்ணய அமைப்பு (பி.ஐ.எஸ்.) தங்க நகைகள் மற்றும் தங்கத்திலான கலைப்பொருட்களுக்கு 'ஹால்மார்க்' என்ற தனித்துவ அடையாள எண்ணை (யு.எச்.ஐ.டி.) அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறையில் இருக்கிறது.. அதன்படி, ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளே கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.. இந்த நிலையில் சில கடைகளில் போலி ஹார்மார்க் முத்திரையுடன் நகைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய தர நிர்ணய அமைப்பு சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் கடைகளில் திடீர் ஆய்வும் நடத்தி வந்தது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை என 3 மண்டலங்களில் இந்திய தர நிர்ணய அமைப்பின் கிளை இருக்கிறது. சென்னை மண்டலத்தின் கீழ் 12 மாவட்டங்கள், மதுரை மண்டலத்தின் கீழ் 19 மாவட்டங்கள், கோவை மண்டலத்தின் கீழ் 7 மாவட்டங்கள் வருகின்றன. அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சில கடைகளில் போலி ஹால்மார்க் முத்திரையுடன் தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளில் சென்னை மண்டலத்தில் 2,434 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டதில், சென்னை (8 கடைகள்), கடலூர் (2 கடைகள்), திருவண்ணாமலை (2 கடைகள்), வேலூர் (4 கடைகள்), காஞ்சீபுரம் (1 கடை), செங்கல்பட்டு (3 கடைகள்) மற்றும் புதுச்சேரி (2 கடைகள்), அந்தமான் நிகோபர் (5 கடைகள்) ஆகிய பகுதிகளில் மொத்தம் 27 கடைகளில் 6.54 கிலோ போலி ஹால்மார்க் தங்க நகைகள் இருப்பது கண்டறியபட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், மதுரை மண்டலத்தில் 3,974 கடைகளில் ஆய்வு செய்ததில், தேனியில் ஒரு கடையில் 3.88 கிலோவும், புதுக்கோட்டையில் 2 கடைகளில் 10.79 கிலோவும் போலி ஹால்மார்க் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபரில் மொத்தம் 21.21 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என இந்திய தர நிர்ணய அமைப்பு கூறியுள்ளது. அதேநேரம் கோவை மண்டலத்தை பொறுத்தவரையில், 2,172 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் எந்த போலி ஹால்மார்க் நகைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
போலி ஹால்மார்க் முத்திரையுடன் நகைகளை விற்றால், ஓராண்டு சிறைதண்டனை, ரூ.1 லட்சம் அபராதம்விதிக்கப்படும், ஆனால் என்னதான் சட்டம் இருந்தாலும் சிலர் போலி ஹால்மார்க் போட்டு கிராமத்து மக்களை ஏமாற்றி விற்பது நடக்கிறது. எனவே நகைகளை வாங்கும்போது எச்சரிக்கையுடன் வாங்க இந்திய தர நிர்ணய அமைப்பு அறிவுரை வழங்கி உள்ளது. தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை, 6 இலக்க தனித்துவ அடையாள எண், தங்கத்தின் தரம் குறித்த விவரங்கள் ஆகிய இந்த 3 விஷயங்கள் சரியாக உள்ளதா என்பதை கவனிக்காமல் தங்க நகைகளை வாங்க வேண்டாம் என்றும் இந்திய தர நிர்ணய அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications