ரூ 15 லட்சத்தில் வீடு கட்டி தராரு நம்ம அஜித்து! ரிஜிஸ்ட்ரேஷனுக்கு ரூ 1 லட்சம் தாங்க.. ரசிகரிடம் மோசடி
நெல்லை: வீடு கட்டித் தருவதாக நடிகர் அஜித்தின் பெயரை கூறி அவருடைய ரசிகரிடம் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்- ராஜேஸ்வரி தம்பதியினர். ஐயப்பன் தீவிரமான அஜித் ரசிகர் என்று கூறப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு திருநெல்வேலி மாவட்டம், தாளையத்துப்பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர், அஜித் ரசிகர் மன்ற தலைவரின் மேலாளர் தனக்கு நெருக்கமானவர் என்று கூறி நம்ப வைத்ததாக தெரிகிறது.
நடிகர் அஜித், கஷ்டப்படும் ரசிகர்களை மாவட்டம் வாரியாக கணக்கெடுத்து அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது.

பத்திரபதிவு தொகை
வீடு கட்டி தருவதற்கு முன்பாக பத்திர செலவு தொகை மட்டும் நீங்கள் முன்பே செலுத்திவிட்டால், வீடு கட்டுவதற்கான ரூ 15 லட்சம் மற்றும் பத்திரப்பதிவு செலவு ஆகிய இரண்டும் உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு சில நாட்களில் வந்துவிடும் என சிவா கூறியதாக தெரிகிறது.

ராஜேஸ்வரி- ஐயப்பன்
ஆனாலும் ராஜேஸ்வரியும் ஐயப்பனும் நம்பாத மாதிரியே சிவாவுக்கு தெரிந்தது. இதனால் அவர்களை நம்ப வைப்பதற்காக சுரேஷ் சந்திரா அலுவலகத்தில் பணிபுரியும் சங்கர் என்பவரை போலியாக தயார் செய்து ஐயப்பனிடம் பேச வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் வீடு கட்டி தரப்படும் என ஆசையால் அதுவும் அஜித்தே கட்டி தருகிறார் என்பதால் பணத்தை கொடுக்க ஐயப்பன் முடிவு செய்தார்.

சிறுக சேர்த்த பணம்
அதன்படி சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை சுமார் ரூ 1.10 லட்சத்தை சிவாவிடம் கொடுத்துள்ளனர். பல நாட்கள் ஆகியும் சிவா இதுகுறித்து எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை. அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது முடியவில்லை. அப்போதுதான் தான் ஏமாந்ததை ஐயப்பன் உணர்ந்தார். இதையடுத்து சிவா இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு ஐயப்பனும் ராஜேஸ்வரியும் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

கொலை மிரட்டல்
அப்போது இருவரையும் கொலை செய்துவிடுவதாக சிவா மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐயப்பனும் ராஜேஸ்வரியும் புகார் அளித்துள்ளனர். அதில் சிவாவிடம் கொடுத்த ரூ 1.10 லட்சம் வயிற்றை கட்டி வாயை கட்டி சேர்த்த பணம். அந்த பணத்தை எப்படியாவது மீட்டு கொடுக்க வேண்டும் என தங்கள் புகாரில் தம்பதி தெரிவித்துள்ளனர். ஏழ்மை நிலையை பயன்படுத்திக் கொண்டு நடிகர் அஜித்தின் ரசிகரிடமே அவரது ரசிகர் மன்றம் பெயரில் மற்றொருவர் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications