தமிழக வெற்றிக் கழகம் பெயரில் இப்படியெல்லாமா நடக்குது? போலீசில் புகார்? விஜய் அதிரடி திட்டம்
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக கற்பனைக்கு எட்டாத போலி தகவல்களை பரப்புகிறார்கள் சிலர். சிலர் தமிழக வெற்றிக் கழகம் பெயரிலேயே போலி அறிக்கைகள் பதிவுகளை வெளியிடுவதால் அதிர்ச்சி அடைந்த விஜய், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கினார். இந்த கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பம், இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கட்சி தொடங்கிய அன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் "விஜய் மக்கள் இயக்கம்" பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு நிவாரண உதவிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. "
"ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. "
மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைப்பற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.
இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்." என்று விஜய் கூறியிருந்தார்.
விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிகாரபூர்வ சமூகவலைதள பக்கங்ளை உருவாக்கினார். அந்த பக்கத்தில் அக்கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் வெளியிடும் அறிக்கைகள் இடம் பெற்று வருகின்றன. விஜய்யின் வெற்றிக்கழகம் தற்போது உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தலை மனதில் வைக்காமல்,, 2026 சட்டசபை தேர்தலை இலக்கு வைத்து விஜய் தீவிரமாக கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த சூழலில் லோக்சபா தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், விஜய்யின் வெற்றிக்கழகம் பெயரில் பல போலி சமூக வலைதள பக்கங்களும் செயல்படுகின்றன. இதில் மோசமான அறுவறுக்கத்தக்க படங்கள் அதிகளவில் பதிவேற்றப்படுகின்றன. விஜய் ரசிகர்களை முகம் சுளிக்கும் வகையில் சிலர் போலி பக்கங்களை உருவாக்கி தங்கள் சொந்தகருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.
சிலர் தமிழக வெற்றிக் கழகத்தின் லெட்டர் பேடு போன்று உருவாக்கி, அதில், பல்வேறு பொய் செய்திகள் பரப்பபடுவதும் தீவிரமாக நடக்கிறது. அண்மையில் விஜய்யுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் கூறியது போல, போலி அறிக்கை வெளியானது.
இதேபோல் தேச நலனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, ஆட்சி மீண்டும் வருவதற்கு ஓட்டளிக்க வேண்டும் என, விஜய் கூறியது போல, மற்றொரு போலி அறிக்கையும் வெளியானது. விஜய்க்கு எதிராக சில அரசியல் கட்சியில் உள்ளவர்கள் மக்களிடையே தவறான தகவலை பரப்புவது நடக்கிறதாம். தவறான அறிக்கை, போலியான லெட்டர்பேடு என அடிக்கடி போலி செய்திகள் பரவுவது நல்லதல்ல என்பதை உணர்ந்த விஜய் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக கடசி நிர்வாகிகளை போலீசில் புகார் அளிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications