தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக வடக்கே தீயாக பரவும் விஷம பிரச்சாரம்.. தோலுரித்த ஜுபைர்
தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதை போன்ற ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
சென்னை: தமிழகத்தில் வட இந்தியர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது போலவும், அவர்களுக்கு எதிராக பெரும் கொடுமைகள் இங்கு அரங்கேறுவது போலவும் ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல், சென்னையில் விரட்டியடிக்கப்படும் வட இந்தியர்கள் என தினந்தோறும் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பதிவேற்றப்படுகிறது.
இந்நிலையில், இந்த வீடியோக்களின் உண்மைத்தன்மை என்ன, எதற்காக இவை பரப்பப்படுகின்றன என்பதை பற்றி விரிவாக அலசுகிறது இந்த பதிவு.

பிழைப்பு தேடி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள்
ராஜஸ்தான், பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிழைப்பு தேடி தமிழ்நாட்டுக்கு வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. குறைந்த ஊதியத்துக்கு அதிக நேரம் இவர்களை வேலை வாங்க முடியும் என்பதால் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளும், கட்டுமான நிறுவனங்களும் இவர்களை அதிக அளவில் வேலைக்கு சேர்க்கிறது. குறிப்பாக, கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை ஆகிய நகரங்களுக்குதான் இந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் வருகின்றனர்.

போலி வீடியோக்கள்
இதனிடையே, இவ்வாறு தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதை போன்ற ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பபட்டு வருகின்றன. இதில் ஒன்றிரண்டு வீடியோக்களை தவிர மற்ற அனைத்தும் போலியானவை எனத் தெரியவந்துள்ளது. அந்த ஒன்றிரண்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களையும் போலீஸார் உடனடியாக கைது செய்துள்ளனர். ஆனால், இதுபோன்ற போலியான வீடியோக்கள் பரவுவதால் தமிழ்நாடு குறித்த தவறான புரிதல் மற்ற மாநில மக்களுக்கு ஏற்படுகிறது. இதுதொடர்பான தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இன்று விளக்கம் அளிக்கும் அளவுக்கு இது சென்றிருக்கிறது.

ஹைதராபாத்தில் நடந்த சம்பவம்
சரி., இப்போது தமிழ்நாட்டில் நடந்த மாதிரியாக என்னென்ன வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு இருக்கின்றன என்பதை இங்கு பார்ப்போம். இதுதொடர்பாக ட்விட்டர் பயனாளர் ஒருவர் ஒவ்வொரு வீடியோவையும் பகிர்ந்து விளக்கம் அளித்திருக்கிறார். இதில் முதல் வீடியோவில் ஒரு வட மாநில இளைஞரை 3 இளைஞர்கள் சேர்ந்து தாக்குகிறார்கள். இதை தமிழ்நாட்டில் நடந்ததை போல சில விஷமிகள் சித்தரித்துள்ளனர். ஆனால், உண்மையில் இது ஹைதராபாத்தில் நடந்த சம்பவம். இதில் தாக்கப்படுபவர் ஜன்கம் சாய்நாத் என்ற இளைஞர் ஆவார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கர்நாடகா சம்பவம்
அதேபோல, இரண்டாவது வீடியோவில் பீகாரை சேர்ந்த ஒருவரை ஒரு கும்பல் தாக்குகிறது. இதுவும் தமிழ்நாட்டில் நடந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இந்த சம்பவம் கர்நாடகாவில் 2021-ம் ஆண்டு நடந்த ஒன்று. இந்த தாக்குதலில் அன்வர் ஷேக் என்ற பீகார் இளைஞர் இறந்துவிட்டார். அவரை கொலை செய்த 4 பேரை கர்நாடகா போலீஸார் கைது செய்துள்ளனர். அதேபோல, மூன்றாவது வீடியோவில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் நிகழ்ந்த சம்பவம். அந்த சம்பவத்தில் ஒரு வழக்கறிஞரை சில இளைஞர் குத்திக் கொலை செய்கிறார்கள். ஆனால், இந் சம்பவம் தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை போல அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் நடந்த சம்பவம்
இன்னொரு வீடியோவில் ஒரு நபரை 4 பேர் சேர்ந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குகிறார்கள். இந்த வீடியோ கோவையில் எடுக்கப்பட்டதாகவும், பீகாரை சேர்ந்தவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்ற தலைப்பிலும் பதிவிடப்பட்டிருக்கிறது. ஆனால், கோவையில் உள்ளூர் ரவுடிகள் இடையே நடந்த மோதல் சம்பவம்தான் இது. இதேபோல, திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இருதரப்பாக பிரிந்து மோதிக் கொண்ட சம்பவத்தை வீடியோ எடுத்து, "பீகார் தொழிலாளர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள்" என்ற தலைப்பில் சிலர் பதிவேற்றம் செய்துள்ளனர்.

"உண்மைத்தன்மையை ஆராயுங்கள்"
இதுபோல ஏராளமான போலி வீடியோக்களையும் அதுதொடர்பான விளக்கங்களையும் அந்த ட்விட்டர் பயனாளர் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், ஊடகங்கள் கூட இதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் இதை அப்படியே செய்திகளாக வெளியிடுகின்றன. இதனை பார்க்கும் மற்ற மாநில மக்களுக்கு தமிழ்நாடு மீதான பார்வையே மாறிவிடும். எனவே, இனியாவது செய்தி ஊடகங்கள் இதுபோன்ற வீடியோக்களை செய்தியாக வெளியிடும் முன்பு அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் என தமிழ்நாடு மக்கள் வலியுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications