ஸ்ரீவித்யாவின் அந்த கடைசி நொடி.. யாரந்த விஐபி.. அதிசய ஸ்ரீவித்யா.. வாடி உதிர்ந்த திரைத்தாயின் ஈரமனசு
சென்னை: கண்களாலேயே வித்தை காட்டி, நம் மனங்களில் ஆழமாக நிறைந்துவிட்டவர் நடிகை ஸ்ரீவித்யா.. இன்று அவரது பிறந்தநாளில், அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்வதில், ஒன் இந்தியா தமிழ் பெருமைப்படுகிறது.
1970களில் தொடங்கி 2000 வரை என சுமார் 30 ஆண்டுகள் மிகத் துல்லியமான நடிப்பு, நேர்த்தியான வசன உச்சரிப்பு, பேசும் விழிகளாலும், தென்னிந்திய சினிமா ரசிகர்களையே தன்னகத்தே வைத்திருந்தார் ஸ்ரீவித்யா.
நாட்டியம், நடிப்பு, இசை என அசாத்திய திறமைகளை ஒருசேரப்பெற்று, திரைத்துறையில் கம்பீரமாக நடைபோட்டவர்கள் ஒருசிலரே. அதில் முக்கிய இடம் ஸ்ரீவித்யாவுக்குத்தான் போய்சேரும். தன் 23 வயதிலேயே அம்மாவாக நடித்தவர்தான் ஸ்ரீவித்யா.

ஒரு வலிமை மிக்க கேரக்டரை கூட, ஆற்றல் கொண்ட ஸ்ரீவித்யாவின் கண்கள் அனாயசமாக வெளிப்படுத்திவிடும்.. ஆனால் ஏனோ, அந்த ஒளிரும் கண்களில், கிளிசரினை ஊற்றி ஊற்றிதான் தமிழ் சினிமா அழ வைத்து அழகு பார்த்தது!,
காதலி மனைவி: பாசக்கார தங்கையாய், அழகு காதலியாய், சிறந்த மனைவியாய், அன்பு தாயாய், இனிய அண்ணியாய், உரிய தோழியாய், அனுபவம் மிக்க பாட்டியாய் என்று ஒரு பெண்ணின் அனைத்து முக்கிய பரிணாமத்தையும் தன்னுடைய படங்களில் குறைவின்றி வெளிப்படுத்தியவர். கபடமற்ற, எதையும் நல்லதாகவே நம்பும் குழந்தை மனமே அவரது வாழ்க்கையை புரட்டி போட வைத்தது.
ஆனால், இவரது 35 வயதுக்கு பிறகு, திருமண வாழ்க்கையில் விதி விளையாட துவங்கியது. அனைத்திலுமே திறன்பட சிறந்து விளங்கிய ஸ்ரீவித்யா, மண வாழ்க்கையில் நிமிர முடியவில்லை.. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் சறுக்கி விழுந்துவிட்டார். இதனால், 9 வருட கால போராட்டத்துக்கு பிறகு தனித்து வாழ வேண்டிய நிலைமைக்கும் ஆளானார்.. ஆனாலும், காலை சுற்றின பாம்பு கூடவே இருந்தது.

குழந்தையிலிருந்து ஸ்ரீவித்யாவுக்கு இருக்கும் ஆன்மீக ஈடுபாடு அவரை பண்படுத்தின. நிறைய பக்குவப்படுத்தியது.. பல கதாபாத்திரங்களை துணிந்து ஏற்று நிறைவாக நடித்தார். தளபதி, காதலுக்கு மரியாதை, புன்னகை மன்னன் போன்ற படங்களில் அவரது சாந்தமான முகம்-கைகூப்பி வணங்ககூடிய எழிலார்ந்த தோற்றம், இயல்பான நடிப்பு, பக்குவமான உணர்வு போன்றவை மறக்க முடியாதது.
சம்மட்டி அடி: ஆனால் காலம் கொடுத்த சம்மட்டி அடியான புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அழகிய ஓவியம் அலங்கோலமாக தொடங்கியது. வடித்து வைத்த சிலை ஒன்றினை கரையான் அரிக்க துவங்கியது.
பெற்றவர்கள் இன்றி, உற்றார் உறவுகளின்றி, தவித்தார். எல்லாமே சூன்யமாகி போனது. அனைத்து சொத்துக்களையும் என்ன செய்வது? வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்ட ஏழை குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக கோடிக்கணக்கான சொத்துக்களை உயில் எழுதி கொடுத்தார். அந்த சொத்துக்களை ஒருவரிடம் நம்பி ஒப்படைத்தார்.
உதவித்தொகை: கல்வி கட்டணத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு படிப்பைத் தொடர உதவித் தொகையை வழங்குவதற்கும், தகுதியுள்ள கலைஞர்களுக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கும் அந்த சொத்தை பயன்படுத்தி கொள்ள சொன்னார். ஆனால் கோர்ட், கேஸ் என்று அந்த சொத்து விவகாரம் நீண்ட காலம் நடந்து கொண்டிருந்தது.
நோயால் அவதிப்பட்ட ஸ்ரீவித்யாவை யாருமே சென்று பார்க்க அனுமதி இல்லை.. ஆனால் ஸ்ரீவித்யா கடைசி நாட்களில் பார்க்க விரும்பியது தனது நண்பர் கமலஹாசனைதான்!!
இவர்கள் இருவரை பற்றியும் எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் திரையுலக காலில் சக்கரம் கட்டி பறந்தன. ஆனால் அதையும் தாண்டி, புரிதல் என்ற நட்பு பாதையில் பயணித்த ஸ்ரீவித்யாவை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார் கமல். பாசத்தையும், நட்பையும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர் இருவரும். ஸ்ரீவித்யாவின் தோற்றத்தை கண்டு கண்கலங்கி நின்றார் கமல். ஸ்ரீவித்யாவும்தான்!
கமல் பேட்டி: அவரை சந்தித்துவிட்டு மருத்துவமனை விட்டு வெளியே கமலிடம், புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு கமல், "உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நிலை குறித்து வெளியே சொல்வது அநாகரீகம்" என்று சொன்னார். பிறகு விரைவிலேயே ஸ்ரீவித்யா மரணத்தை பற்றி சொன்ன கமல், " அவள் இறந்தாலும் இறவா நட்பு" என்றார். கமலின் மறக்கமுடியாத ஒரே தோழி ஸ்ரீவித்யாவாகத்தான் என்றென்றும் இருக்க முடியும்.
எனினும், முறையான கவனிப்பு கிடைக்காமல், பாசமும் கிடைக்காமல், அன்புக்கு ஏங்கி தவிக்கும் ஒரு சராசரி பெண்ணாகவே கடைசிவரை ஏங்கி தவித்தார்.. ஆனால், தன்னை சந்திக்க யார் வந்தாலும், அவர்களிடம் கொஞ்சுமும் ஈகோ இல்லாமல் பேசுவாராம்.. அவர்களுக்கு உரிய மரியாதையை தந்து பேசுவாராம்.. சொந்த சகோதரி போலவே நடந்துகொள்வதாக, பல பத்திரிகையாளர்கள் நெகிழ்வுடன் நினைவுகூர்ந்திருக்கிறார்கள்.

திரைத்துறையில் எப்பேர்பட்ட பிரபலங்களாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் சிக்குண்டு போய்விடுகிறார்கள் என்பதும், காலம் அவர்களை ஒரு புரட்டு புரட்டியே போட்டு தன்னுடன் அழைத்து சென்றுவிடுகிறது என்பதற்கும் ஸ்ரீவித்யா உதாரணம்.
காலத்தின் கோலம்: அவர் எந்த அளவிற்கு விசால மனம் படைத்தவர் என்பதற்கும், அவரது மாபெரும் மனித நேயத்திற்கும், நாட்டியக்கலை மீது இருந்த பற்றுக்கும் அவர் எழுதி வைத்த உயிலே சாட்சியாகும். இதைக்கூட புரிந்து கொள்ளாத ஒருவன் அவருக்கு கணவராக இருந்தது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதைவிட கொடுமை, தாய்மையடைந்த போதெல்லாம் அந்த வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்ட இந்த திரைத்தாயினால் கடைசிவரை நிஜத்தாயாக வாழமுடியாமல் போனது துரதிர்ஷ்டமே..!












Click it and Unblock the Notifications