யார் என்று தெரிகிறதா?... பிரபல ரவுடி பினு மீண்டும் கைது… தனிப்படை போலீசார் அதிரடி
சென்னை: தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு-வை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூரில் பிரபல ரவுடி பினு, அவர் கூட்டாளிகள் அக்பர், மனோஜ்குமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஜாமீன் பெற்று வெளியே வந்த ரவுடி பினு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

அரிவாளால் கேக் வெட்டிய பினு
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் பிரபல ரவுடி பினு. இவர் மீது கொலை, ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கத்தில் ரவுடி பினு தனது கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

தப்பி ஓட்டம்
இதனை அறிந்த போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்து 75 ரவுடிகளை ஒரே நேரத்தில் கைது செய்தனர். அப்போது ரவுடி பினு தப்பி ஓடிவிட்டார். அவர், அரிவாளால் கேக் வெட்டும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்கவுண்டர் பீதி
போலீசாரின் என்கவுண்டர் பீதியால் அவர் பிப்ரவரி 13-ந்தேதி அம்பத்தூர் போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் போலீசார் முன்னிலையில் சரண் அடைந்தார். முன்னதாக, நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை. என்னை மன்னித்து வாழவிடுங்கள் என்று கெஞ்சியபடி பேசும் வீடியோ வெளியாகி இருந்தது.

பினுவுக்கு ஆபத்து?
விசாரணைக்கு பின்னர் பினுவை புழல் சிறையில் அடைத்தனர். அங்குள்ள மற்ற ரவுடிகளால் பினுவுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் வேலூர் சிறைக்கு அதிகாரிகள் மாற்றினர்.

நிபந்தனை ஜாமீன்
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி பினுவுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. 30 நாட்கள் மாங்காடு போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ஜாமீனில் வந்த பினு அதன் பின்னர் மாங்காடு போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட வரவில்லை. அவர், தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

ரவுடி பினு மீண்டும் கைது
இதனையடுத்து, பினுவை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சென்னை எழும்பூரில் வைத்து ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் சுற்றி வளைத்து மீண்டும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications