"போலாம் ரைட்".. அடுத்த சரவெடி.. 1000 பேருந்துகள் புதிதாக வாங்கப்படும்.. தமிழக பட்ஜெட்டில் அதிரடி
1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும் இன்றைய தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று இன்றைய தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.. போக்குவரத்து துறை சார்பில் வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு, மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 2023 -2024 ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டசபையில் நிதியமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்தார்... ஆனால், இவர் பட்ஜெட் உரையை துவக்கியதுமே, எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துவிட்டனர்.
பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் பேசும்போது, நிதிநிலைமை குறித்து விரிவாக எடுத்து கூறினார்.. இந்த நிதிநெருக்கடி நிலைமையிலும், திமுக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

8 விஷயங்கள்
நிதியமைச்சர் பேசும்போது, "பல்வேறு இடையூறுகள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார் . குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்ற உணர்வுடன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன்... திராவிட மாடல் ஆட்சி வெற்றி நடை போட்டு வருகிறது. எல்லாருக்கும் ஒன்றான வளர்ச்சியை கருத்தில்கொண்டு, நம்முடைய மாநிலம் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.. பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பு வேலைவாய்ப்பு, பெண்களின் வாழ்வாதாரம், சமூக...பொருளாதார வளர்ச்சி, அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய உறுதி செய்தல் உள்ளிட்ட 8 விஷயங்களில் முக்கிய கொள்கையாக கொண்டு நாம் முன்னேறி வருகிறோம். வரும் ஆண்டில் பெரும் சவால்களை எதிர்கொள்ள உள்ளோம். முந்தைய அரசைக் காட்டிலும், வருவாய் பற்றாக்குறையை 30 ஆயிரம் கோடி குறைத்துள்ளோம்" என்று பெருமிதம் தெரிவித்தார்.

தியாகராஜன்
இதையடுத்து, பட்ஜெட் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகின.. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500-க அதிகரிக்கப்பட்டுள்ளது.. கடுமையான பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500ல் இருந்து ரூ.2,000-ஆக அதிகரிப்பு, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்துக்காக ரூ.1444 கோடி ஒதுக்கீடு, மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ரூ.100 கோடி செலவில் ஆதி திராவிட மாணவர்களுக்கான புதிய விடுதிகள் கட்டப்படும், ஆதி திராவிடர் பழங்குடி நலத்துறைக்கு ரூ 3,513 கோடி நிதி ஒதுக்கீடு, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிய வகுப்பறைகள் ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு என்பன பல அறிவிப்புகளை தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்..

1000 பஸ்கள்
அந்தவகையில், 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த அக்டோபர் மாதம் சட்டசபையில் 110-வது விதியின்கீழ் அறிவிப்புகள் வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.. அப்போது, போக்குவரத்து துறை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், "500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவெடுத்துள்ளது. அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள ஆயிரம் பழைய பேருந்துகளைப் புதுப்பித்திடவும் அறிவுறுத்தியிருக்கிறேன். இதுமட்டுமன்றி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியோடு 2,213 டீசல் பேருந்துகளையும், 500 மின்சார பேருந்துகளையும் வாங்கவும், உலக வங்கி உதவியோடு மேலும் ஆயிரம் பேருந்துகளை இயக்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போலாம் ரைட்டு
இந்த முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப்பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.. அதற்கேற்றவாறு 2 மாதங்களுக்கு முன்பு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.. விரைவில் புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், தொடர்ந்து 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. அதில் 100 பேருந்துகள் சென்னை மாநகரின் சேவைக்காக விடப்படும் என்று உறுதி தந்திருந்தார்.

லட்டு நியூஸ்
இந்நிலையில்தான், 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே பெண்களுக்கு இலவச பேருந்து திட்டமானது சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அதுவும் இந்த பயணத் திட்டத்தின் மூலம் 40 சதவீதமாக இருந்த மகளிர் பயணிகளின் எண்ணிக்கையானது, 60 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டு வரும்நிலையில், வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம் இன்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications