பட்டா மாறுதல்.. கிராம நத்தம் நிலப்பட்டா வெச்சிருக்கீங்களா? டிஜிட்டல் ஆவணத்தில் தமிழக அரசு அடுத்த நச்
சென்னை: தமிழகத்தில் நிலம் தொடர்பான பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கிராம நத்தம் நில ஆவணங்கள் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கடந்த 2023-24 பட்ஜெட் தாக்கலின்போது, அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நத்தம் நிலங்களுக்கு விரைவில் இணையவழி பட்டா மாறுதல் முறை கொண்டுவரப்படும் என்று அறிவித்திருந்தார்..

நத்தம் பட்டா: பிறகு அந்த அறிவிப்பு அமலுக்கும் வந்துவிட்டது.. கிராம நத்தம் பட்டாக்கள் அரசு புறம்போக்கு நிலங்களாக கருதப்படுவதாலும், பல காலமாகவே, மக்கள் வாழும் பகுதிகளாக இருந்ததாலும், அவற்றை அனுபவ ஸ்வாதீன இடங்களாக கருதி, 1991ல் நத்தம் பட்டாவாக அளவீடு செய்து, அப்போதைய உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
எனவே, இதுவரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாத நிலைமை இருந்துவந்த நிலையில், அவற்றை கணக்கீடு செய்து, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறையும் தற்போது துவங்கப்பட்டுள்ளது.
வழிகாட்டி மதிப்பு: ஆன்லைனிலேயே நத்தம் இணையவழி பட்டா மாறுதல் செய்ய முடியும் என்று முதல்வர் ஸ்டாலினும் அறிவித்துள்ளார்.. நத்தம் நிலம் தொடர்பான விவரம் ஆன்லைன் மயமாகிவிட்டதால், வழிகாட்டி மதிப்பு விரைவில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. மேலும், அரசு வழங்கிய பட்டா மற்றும் பத்திர அடிப்படையில், உரிமையாளர் முழுமையான உரிமைகளையும் இனி எளிதாக பெற முடியும் என்று நம்பப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கிட்டத்தட்ட 1.42 கோடி நத்தம் நில ஆவணங்கள், தமிழகத்தில் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக, நில அளவைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, நில அளவைத் துறை இயக்குனர் பி.மதுசூதன் ரெட்டி, அனைத்து கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்..
டிஜிட்டல் ஆவணங்கள்: அந்த கடிதத்தில், "தமிழகத்தில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள், 2014 முதல் நடந்து வருகின்றன. இதில், தற்போதைய நிலவரப்படி, 1.42 கோடி நத்தம் நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.. இந்த டிஜிட்டல் ஆவணங்கள், பல்வேறு கட்ட சரிபார்ப்புக்கு பின், தற்போது தமிழ்நிலம் தகவல் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
இ - சேவை இணையதளம் வாயிலாக, தமிழ்நிலம் தகவல் தொகுப்பில், நத்தம் நில ஆவணங்களை பொதுமக்கள் பார்க்கலாம். இ - சேவை மையங்கள் வாயிலாக, நத்தம் நில பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர் முதல் பல்வேறு நிலைகளில் உள்ள அலுவலர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
கடிதம்: இப்புதிய வழிகாட்டுதல்களை அலுவலர்கள் கடைபிடிப்பதை கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும். நத்தம் நில பட்டா மாறுதலுக்கு மக்கள், இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்காக பொதுமக்களை தாலுகா அலுவலகங்களுக்கு வரும்படி அலைக்கழிக்கக் கூடாது" என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications