ஓசூர் விமான நிலையம் வேண்டாம்.. 12 கிராம விவசாயிகள் எதிர்ப்பு.. முதல்வரை சந்திக்க திட்டம்!
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைக்க, சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இடம் தேர்வு செய்த நிலையில் இந்த திட்டத்தைக் கைவிடக்கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்க 12 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. தொழில் நகரமான ஓசூரில் உற்பத்தியாகும் பொருட்கள் வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. ஓசூர் நகரம் வான்வழிப் போக்குவரத்துக்கு அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரையே நம்பியுள்ள நிலையில், தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) ஓசூரைச் சுற்றியுள்ள 5 இடங்களை தேர்வு செய்து இந்திய விமான நிலையம் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தது. இந்த திட்டத்தை நிறைவேற்ற 2 இடங்கள் சாத்தியம் என இந்திய விமான நிலையம் ஆணையம் பதிலளித்தது.
இதையடுத்து, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், ஓசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான சிறப்பு ஆலோசகரை நியமித்து 2 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வின்படி சூளகிரி வட்டத்துக்கு உட்பட்ட வெங்கடேஷ்புரம், மிடுதேப்பள்ளி, ஓசூர் வட்டத்துக்கு உட்பட்ட அரவனப்பள்ளி, முத்தாலி, அளேந்தம், பலவனப் பள்ளி, ஆத்தூர், காருப்பள்ளி, தாசனப்பள்ளி, நந்திமங்கலம், சூடகொண்டப்பள்ளி உள்ளிட்ட 12 கிராமங்களில் 2,980 ஏக்கர் நிலத்தில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓசூர் விமான நிலைய திட்டத்துக்காக 12 கிராமங்களில் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள விவசாய நிலம், வறண்ட நிலம், அரசு புறம்போக்கு நிலம் ஆகியவற்றின் சர்வே எண்ணுடன் அரசின் நிர்வாக அனுமதியை பெற்றுத்தரக் கோரி கடந்த செப்டம்பரில் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஓசூர் அருகே நந்திமங்கலத்தில் நேற்று 12 கிராம விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். முதல்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திட்டத்தை கைவிட வலியுறுத்துவது, கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது, போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், இயற்கை ஆர்வலர்களின் ஆதரவு கோருவது என முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, பாஜக நிர்வாகியும், முன்னாள் எம்.பியுமான நரசிம்மன், பாமகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதனால், ஓசூர் விமான நிலைய எதிர்ப்பு சூடுபிடிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
ஓசூர் பகுதிகளில் தொழிற்சாலைகள், சாலைகள் அமைக்க 25,000 ஏக்கர் விளை நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளது. 5-வது சிப்காட் அமைக்க விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டால், 12 கிராமங்கள் பாதிக்கப்படும். விமான நிலையத்தால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. எனவே, அரசு இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications