பூட்டிய வீட்டுக்குள் தந்தை மகள் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு.. ஆடிப்போன சென்னை.. பின்னணி என்ன?
சென்னை: சென்னை அருகே திருமுல்லைவாயலில் பூட்டிய வீட்டுக்குள் தந்தை மகள் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் அழுகிய நிலையில் இருவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் தான் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தந்தை மகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாமுவேல் சங்கர் (வயது 78). இவருக்கு நீரிழிவு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இவரது மகள் விந்தியா. விந்தியா கணவரை பிரிந்து தந்தையின் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக விந்தியாவுக்கு மருத்துவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சாமுவேல் எமுலேசர் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து இருவரும் பேசி வந்தனர்.

அப்போது விந்தியா, மருத்துவர் எமுலேசரிடம் தன் தந்தை டயாலிஸிஸ் நோய் பாதிப்பால் அவதியடைந்து வருவதாக கூறியிருக்கிறார். இதற்கு நீங்கள் தந்தையை சென்னைக்கு அழைத்து வந்தால், நான் சிகிச்சை அளிப்பதாக கூறியிருக்கிறார். இதனை நம்பி விந்தியா தனது தந்தையுடன் சென்னைக்கு வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் சென்னைக்கு வந்துள்ளனர். அப்போது மருத்துவர் எமுலேசர் சிகிச்சையளித்தார்.
எனினும் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இதனால் நீங்கள் சென்னையிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கும்படி அறிவுறை கூறியிருக்கிறார். அவர் சொன்னதின் பேரில், விந்தியா சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் அருகே வாடகைக்கு வீடு பார்த்து தங்கியுள்ளனர். மருத்துவர் எமுலேசரும் அவ்வப்போது வீட்டுக்கு வந்து சாமுவேல் சங்கருக்கு சிகிச்சை அளித்து விட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 4 மாதமாக இவர்கள் இருந்த வீடு பூட்டியே கிடந்துள்ளது.

தற்போது இரண்டு நாட்களாக அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இன்று தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியதால் போலீசுக்கு புகார் கொடுத்தனர். அதன்பேரில் அந்த வீட்டிற்கு வந்து போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தனர். அப்போது பூட்டிய வீட்டுக்குள் தந்தை சாமுவேல் சங்கர் மற்றும் அவரது மகள் விந்தியா ஆகிய இருவரது உடலும் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து இருவரது உடலையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தை மகள் இருவரும் எப்படி உயிரிழந்தனர்? கொலையா அல்லது தற்கொலையா? என போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் தான் மருத்துவர் சாமுவேல் எமுலேசர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இதுபற்றி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது மருத்துவர் தான் விந்தியாவை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டில் வைத்து மருத்துவர் விந்தியாவின் தந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தார். இதில் ஒரு நாள் சிகிச்சை பலனின்றி சாமுவேல் சங்கர் உயிரிழந்துவிட்டார். தந்தையின் இறப்பால் அதிர்ச்சியடைந்த விந்தியா, மருத்துவர் சாமுவேல் எமுலேசரிடம் கேட்டுள்ளார்.
மேலும் நீங்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று அவரிடம் சண்டையிட்டுள்ளார். இனி நான் இங்கு இருக்க மாட்டேன். வெளிநாடு செல்ல போகிறேன் என்று விந்தியா கூறியுளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் விந்தியாவை தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்து உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவர் வீட்டை பூட்டிவிட்டு, வாசனை திரவியத்தை வைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகே முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications